ஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்
Recommended Video
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை விரைவில் நிறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு விநாடிக்கு 2 லட்சத்து கனஅடிக்கு மேல் வந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியை மூன்று நாளில் தாண்டியது. படிப்படியாக கடந்த சில நாட்களாக காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைகளில் நீர் இருந்து நீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்துள்து.
அணையின் நீர் இருப்பு
இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.88 டி.எம்.சியாகவும், நீர் வெளியேற்றம் (பாசனத்திற்காக) 10 ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.
கண்காணித்து வெளியேற்றுங்கள்
இந்நிலையில் மத்திய ஜல்சக்தி (நீர்வளத்துறை) அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கர்நாடகாவில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர் வெளியேற்றமும் குறைந்துள்ளது. இருப்பினும் சராசரியாக 10 முதல் 30மில்லி மீட்டர் மழை பெய்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். எனவே விரைவில் அணை முழு கொள்ளவை எட்டும் சூழல் உள்ளதால், அணைக்கு வரும் நீர் வரத்தை கண்காணித்து வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது
வெள்ள அபாயம் உள்ளது
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். 120 அடியை (தற்போது 115 அடி ) நெருங்கிவிட்டதால் போது பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும். எனவே அப்போது வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.