மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்!!
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியான குடகு மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை பெரு வெள்ளம் ஏற்படும் என்று மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று மாலை கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,625 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 6,000 கன அடியாக அதிகரித்து இருந்தது. பின்னர் 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மட்டும் 1.35 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கன மழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து மேட்டூருக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்
கபினியில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது. இது தற்போது 60 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரத்தின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.55 அடியாக உள்ளது. இன்று மட்டும் 1.35 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 120 அடியாகும்.