வறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில், மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
போதிய மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. பல கிராமங்களில் குடிக்க குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலையில் உள்ளனர்.
இதையடுத்து, தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தற்போது, அதிமுக சார்பில், கோவில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில், மழை வேண்டி இஸ்லாமிய சமூகத்தினர் சிறப்பு தொழுகை நடத்தினர். 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தொழுகையில், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, அ.தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நாகூர் கடற்கரையில் திரண்ட இஸ்லாமியர்கள், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் நலமாக வாழவும் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்புத் தொழுகையில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.