8 வழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்.. முதல்வர் பழனிசாமி
ஓமலூர்: சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சேலத்தில் இந்தாண்டு முதலே சட்டக்கல்லுாரி செயல்படத் தொடங்கும். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல. 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகள் நிச்சயம் நஷ்டமடைய மாட்டார்கள்.
நிலம் கொடுப்பவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டு தான் நிலங்கள் கையகப்படுத்தப்படும். சேலம் - சென்னை 8 வழி விரைவுச்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, 70 விவசாயிகள் நிலத்தை மனமுவந்து கொடுப்பதாக மனு அளித்துள்ளனர்.
மேலும் பேசிய அவர் கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை விவசாயிகள் பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். உபரியாக கடலில் கலக்கும் நீரையே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒரு சொட்டு நீராக இருந்தாலும் முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேறும். இத்திட்டம் சாத்தியமானால் காவரி ஆற்றின் இரு கரைகளை தாண்டி இருபுறமும் 50 கி.மீ சுற்றளவில் உள்ள விவசாயிகள் பயன் அடைவர்.
காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் கதவணை அமைத்து உபரி நீர் தேக்கி வைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியில் 1.5 டிஎம்சி நீரை தேக்கும் வகையில் கதவணை கட்டப்படும். கேரளம் மற்றும் குடகு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர் பெறுவதில் சிக்கல் ஏற்படாது. போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்த உடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்