கவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி!
சேலம்: மக்களின் நிலத்தை பிடுங்கி எட்டு வழிச்சாலை அமைக்கப்படாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2 அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியின் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலை முதல் அழகாபுரம் காவல் நிலையம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
சேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்!
திமுகவினர் பங்கேற்பு
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் அதிமுகவினர் மட்டுமின்றி திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் பங்கேற்றனர்.
தனிநபர் வசதிக்காக அல்ல
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் உயிரை காக்கவே சாலை திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என்றார். மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் அமைக்கப்படுகிறதே தவிர தனிநபரின் வசதிக்காக அல்ல என்றும் அவர் கூறினார்.
நிலங்களை பறிக்க மாட்டோம்
சேலம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ் போர்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி 8 வழிச்சாலை திட்டத்தை திணிக்க மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
திமுக, அதிமுகவினர் முழக்கம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்று பேசியபோது, திமுகவினர் ஆர்ப்பரித்து முழக்கமிட்டனர். இதேபோல் ஜெயலலிதா பெயரை குறிப்பிட்ட போது அதிமுகவினரும் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.