தமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கத்தின் பின்னணி இதுதான்!
சேலம்: தமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை திட்டமிட்டே தனியார் கைகளுக்குப் போகிறது. இதனால் 2,500 ஊழியர் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்பட்டது குறித்து வினவு இணையதளத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:
சேலம் உருக்காலை 1970 ல் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்திய அரசின் மகா ரத்தினங்களுள் ஒன்று. இந்த நிறுவனம் செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எனப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதாகும். நமது நாட்டின் நாணயம், பாத்திரங்களுக்கு தேவையான ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முதல், நமது ரயில் பெட்டிகள், செயற்கைகோள்கள், அணு உலைகள் ஆகியவற்றுக்கு தேவையான ஸ்டீல் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
ரூ.136 கோடி முதலீட்டில் 32,000 டன் உற்பத்தி திறனுடன் துவங்கப்பட்ட இந்த மகாரத்தினத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 8,000 கோடி ரூபாயாகும். உண்மையான இதன் மதிப்பு இந்த உத்தேச மதிப்பைவிட பல மடங்குகள் அதிகமாகும். இன்றைய இதன் உற்பத்தி திறன் 6 லட்சம் டன். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்தியில் சர்வதேச அளவில் 12 முன்னணி நிறுவனங்களில் சேலம் உருக்காலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலையில் 2,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 5,000 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடாகவும் இரண்டாவது அதிகமாக ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது. 2007-08 ஆண்டில் உற்பத்தி 20 லட்சம் டன். இன்று சில ஆண்டுகளாக 33 லட்சம் டன். இது உலக உற்பத்தியில் 7%. உள்நாட்டு சந்தை 17 லட்சம் டன் (Steelworld Oct 2014). இந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் பல வகைகள் உள்ளன. இதில் சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தான் மிகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் விளங்குகிறது. குறிப்பாக, விண்வெளி, அணு உலை, நாணயங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதற்கு இது முக்கியத்துவமுடையதாக உள்ளது.
உலக அளவில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்பாடு தனிநபருக்கு 5 கிகி. ஆனால் இந்தியாவில் 2 கிகி ஆக உள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளிகள் தற்போதைய நிலையில் இருந்து ஆண்டுக்கு 8-9% அளவுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்பாட்டை உயர்த்தக் கோரிவருகின்றனர்.
சேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்!
சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தான் மிகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் விளங்குகிறது. அதாவது, ஸ்மார்ட் சிட்டிகள், துருப்பிடிக்காத இரயில் பெட்டிகள், பேருந்து-இரயில் நிலையங்களில் கூரைகள், கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள் போன்ற பல வடிவங்களில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்படுத்துவதை உயர்த்த அரசு வகுத்துள்ள பல திட்டங்களை விரைவாக நிறைவேற்ற கோரிவருகின்றனர். அதனால், உலக அளவில் இந்திய சந்தை என்பது பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டதாக உள்ளது. இந்த உள்கட்டமைப்பு 'வளர்ச்சி'த் திட்டங்கள் நாட்டில் 10% பேர் மட்டும் பயனடையும் வகையில் இருந்தாலும், இதனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SAIL-க்கு (குறிப்பாக, சேலம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுக்கு) நல்ல எதிர்காலமும் வளர்ச்சிக்கான அடிப்படையும் உள்ளது. ஆனால், அரசோ எதிர்திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த எதிர்காலத்தை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கிறது.
அண்மை காலமாக பொத்துறை இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. சீன இரும்பு இறக்குமதியும் கள்ளச்சந்தையும் இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தாலும் சொந்த நாட்டு தேவை, ஏற்கனவே செய்துவரும் ஏற்றுமதி போக 5 கோடி டன் இரும்பை உபரியாக வைத்துள்ளது. அதனால், மலிவான விலையில் சீன இரும்புப் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சீனாவில் இருந்து இரும்பு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க இறக்குமதி வரியை 7.5%லிருந்து 15%ஆக உயர்த்து போன்ற பல கோரிக்கைகளை வைத்துள்ளன இந்தியாவின் இரும்புப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள். சீன எதிர்ப்புப் பேசியே ஆட்சியைத் தக்கவைத்துவரும் மோடி அரசோ, இதனை செய்வதற்கு துப்பில்லை.
பொதுத்துறை சேர்ந்த உருக்காலைகள் நட்டத்தில் இயங்குவதற்கு மற்றொரு காரணம் கள்ளச்சந்தை வியாபாரம். இந்திய தொழில்முறை ஒழுங்கு ஆணையத்தின் விதிகளின் படி ஒரு டன் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பொருட்களின் விலை ரூ.90,000க்கு குறைவாக விற்கக்கூடாது. ஆனால், கள்ளச்சந்தையில் ரூ.70,000-க்கு கூட விற்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் தரமான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஒரு டன்னுக்கு 1.35 லட்சத்திலிருந்து 1.65 லட்சம் ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனம் என்பதால் அதனால் விதிகளின்படி நேர்மையாகத்தான் விற்பனையைச் செய்ய முடியும். ஆனால், டன்னுக்கு இருபதாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து பலரும் சேலம் உருக்காலையிடம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. முக்கியமாக இதனால் ஒட்டுமொத்த இரும்பு உற்பத்தித் துறைக்கே நெருக்கடி இருந்தாலும் பொதுத்துறைகள் தான் வேகமாக நட்டமடைகின்றன.
இது, தனியார்மயமாக்கத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. சேலம் உருக்காலை மிக லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. குறிப்பாக, 2003 முதல் 2010 வரை சராசரியாக ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் லாபமீட்டி வந்தது.
2010-ம் ஆண்டில் புதிய எஃகு உற்பத்தி கூடம் அமைக்க ரூ.2,000 கோடி கடன் வாங்கியது. அதற்கு வட்டி மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.650 கோடி ரூபாய் கட்டியுள்ளது. வட்டியைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றி வரும் இந்த காலத்தில், பொதுத்துறை நிறுவமனாக இருப்பதால்தான் இந்த வட்டித்தொகையைக் கட்டியுள்ளது.
இப்படி சிறப்பாக இலாப மீட்டிய இவ்வாலையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்ட பின்னர், பல சதிச்செயல்கள் மூலம் நட்டக் கணக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேலத்தில் இயங்கி வந்த உருக்காலையின் மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. இதனால் விற்பனைத் துறை முற்றிலும் முடங்கிப்போனது. இதன் வாடிக்கையாளர் நிறுவனங்களின் எண்ணிக்கை 70-லிருந்து படிப்படியாக குறைந்து வெறும் 9 நிறுவனங்கள் என்ற அளவிற்கு சரிந்தது. ஆக, நூறு கோடி லாபமீட்டிய ஆலை ரூ.450 கோடி நட்டத்தில் இயங்குகிறது.
விற்பனை மையத்தை கொல்கத்தாவுக்கு மாற்றியதால் மார்கெட்டிங் செய்ய முடியாமல் போகும் என்பது அரசுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தலைமையகத்தை வேறு தூரமான மாநிலங்களுக்கு மாற்றி நிர்வாகத்தை முடக்கி சீர்குலைப்பதை ஆளுகின்ற பா.ஜ.க அரசு ஒரு புதிய தந்திரமாக கடைபிடிக்கிறது.
இவ்வாறு வினவு இணையதளத்தில் எழுதப்பட்டுள்ளது.