அனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்!
தமிழகத்தில் வறுமையில் இருக்கும் பால் உற்பத்தியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அதன் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: தமிழகத்தில் வறுமையில் இருக்கும் பால் உற்பத்தியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அதன் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதான் பால் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க பால் விலை உயர்ந்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இது தமிழக மக்களை பெரிய அளவிற்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. முக்கியமாக பால் பொருட்களை நம்பி இருக்கும் மக்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
என்ன பேட்டி
இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில். தமிழகத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
என்ன உற்பத்தி
இதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களும் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து என்னிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதனால் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
காரணம் என்ன
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கட்டணம் அதிகமாகி உள்ளது . இவற்றை கருத்தில் கொண்டு ஐந்து வருடங்களுக்கு பிறகு பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எப்படி தமிழகம்
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தான் பால் கொள்முதல் விலை உயர்வு குறைவுதான். இங்கு பால் விலை குறைவுதான். கடந்த ஐந்தாண்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் கூலி உயர்வு அதிகரித்திருக்கிறது. எல்லோருக்கும் விலை உயர்கிறது போதும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.