மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு ஓடிய தேன்மொழி.. பின்னாடியே ஓடிய போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு!
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம்: மண்ணெண்ணையை உடலில் ஊற்றியபடியே தேன்மொழி ஓடவும், அவர்களை போலீசார் பின்னாடியே துரத்தி கொண்டு ஓடிப்போய் மீட்டனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் ஆபீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
சேலம் மாவட்டம் சித்தனூர் மல்லமூப்பம்பட்டி அருகே உள்ள கக்கன்காலனியை சேர்ந்த தம்பதி மணிகண்டன் - தேன்மொழி. இவர்கள் கூலித்தொழிலாளர்கள். 11 மாத ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில் தேன்மொழி நேற்று குடும்பத்துடன் சேலம் கலெக்டர் ஆபீஸ் வந்தார். பிறகு திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடம்பில் ஊற்றினார். இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் பதறி கொண்டு, தடுக்க முயன்றனர்.
ஆனால், தேன்மொழி, போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஓடி கொண்டே இருந்தார்.. ஓடும்போது மண்ணெண்ணையை ஊற்றி கொண்டே கலெக்டர் ஆபீசில் ஓடினார். அப்படியே, தீக்குளிக்கவும் முயன்றார். ஆனால், அதற்குள் போலீசார் ஓடிச்சென்று பாட்டிலை பிடுங்கிவிட்டனர். இதையடுத்து, தேன்மொழி, குடும்பத்துடன் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார். அங்கு விரைந்து சென்ற போலீசார் தேன்மொழியிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் சொன்னதாவது: "போன 5-ந்தேதி என் கணவர் அரியானூரில் பைக்கில் போகும்போது, ஒரு பெண் டாக்டர், காரை போதையில் ஓட்டி வந்து என் கணவரின் பைக் மீது மோதிவிட்டார். இதில் என் கணவர் படுகாயமடைந்தார். அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் தந்தும் இதுவரை போலீசார் விசாரிக்கவில்லை.
அதனால், துணை கமிஷனரிடம் புகார் தந்தேன்.. அவர் கொண்டலாம்பட்டி ஸ்டேஷன் போய் புகார் தருமாறு சொன்னார்.. அங்கும் சென்று புகார் தந்தேன்.. ஆனால் இதுவரை விசாரணை இல்லை.. என் கணவருக்கு சிகிச்சை வேண்டும், விபத்து ஏற்படுத்திய பெண் டாக்டர் மீது நடவடிக்கை வேண்டும்.." என்றார். இதையடுத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தேன்மொழியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.