ஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கொலை.. சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
சேலம்: ஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் அதே எஸ்டேட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41) மற்றும் அவரது மனைவி கதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்த விசாரணையில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்சுராய், சுக்ராம், ராம்நாத் ஆகிய மூவரையும் ஏற்காடு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
3 பேரிடம் நடத்திய விசாரணையில் பூத்ரானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கதிகேன்ஸ் நாட்டு மருந்த கொடுத்துள்ளார். இதனால் பூத்ராமின் மனைவி இறந்துள்ளார். இதற்காக பழிவாங்குவதற்காகவே இந்த இரு கொலைகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
சென்னை, கோவை, செங்கல்பட்டில் மீண்டும் மின்னல் வேகம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா!
மேலும் தலைமறைவாக உள்ள ஹைரா போத்ரே மற்றும் பூத்ரான் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தம்பதி கொலை செய்யப்பட்ட அதே எஸ்டேட்டில், தலைமறைவாக இருந்த ஹைரா போத்ரே கழுத்தறுபட்டு, முகம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அருகில் ஒரு கத்தியும் கிடைத்தது. எனவே பூத்ரான்தான் கைரா போத்ரேவை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து அவரை தேடி வருகிறார்கள்.