ராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை!
மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன
Recommended Video
சேலம்: ராத்திரி நேரத்தில் தூங்க விடுவதே கிடையாது.. தினம் தினம் தண்ணி அடித்துவிட்டு, தகராறில் ஈடுபடவும் கணவரை பிரிந்து வந்துள்ளார் மனைவி.. இந்த ஆத்திரத்தினால்தான், இருட்டு நேரத்தில், புதருக்குள் மறைந்திருந்து மனைவியை கொலை செய்யும் அளவுக்கு கணவன் சென்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. 26 வயதாகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. 21 வயதில் மோகனேஸ்வரி என்ற மனைவியும், சிபு என்ற 3 வயது மகன் இருக்கிறான்.
இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.. 4 வருஷத்துக்கு முன்பு உயிருக்கு உயிராக காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டவர்கள். கோவையில் வீடு எடுத்து 3 வருடமாக வசித்து வந்தனர். ஆனால், தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது. அதனால், கோபியுடன் கோபித்து கொண்டு, மோகனேஸ்வரி 2 மாதத்திற்கு முன்பு குழந்தையை தூக்கி கொண்டு அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார்.
அதன்பிறகு, துணிக்கடை ஒன்றில் வேலைக்கும் போக ஆரம்பித்தார். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு நேரம் ஆகியும் மோகனேஸ்வரி வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதன்பிறகு அவரை தேடிக் கொண்டு அவரது அப்பா சென்ற போதுதான், மகள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அலறினார். தகவலறிந்து வீராணம் போலீசார் விரைந்து வந்து, விசாரணையை ஆரம்பித்தனர்.
விசாரணையில் குடும்ப தகராறு என்று தெரிந்தது. கணவர் கோபிக்கு அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் இரவு நேரம் ஆனால் தண்ணியை போட்டுவிட்டு மனைவியை சகட்டுமேனிக்கு அடித்துள்ளார். அதனால்தான் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு மோகனேஸ்வரி வந்தார்.
ஆனால் தொடர்ச்சியாக, மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். இதற்கு மனைவி மறுப்பு சொல்லவும், நேரிலேயே போய் இரண்டில் ஒன்று கேட்டுவிடலாம் என்று கங்காபுதூர் வந்திருக்கிறார். வேலை முடிந்து இரவு 9 மணிக்கு மோகனேஸ்வரி வரும் வழியில் காத்திருந்தார். அந்த இடம் ஒரு முட்புதர் போல உள்ளது.. ஆள் நடமாட்டமும் இல்லை.. பாக்கெட்டுக்குள் ஒரு கத்தியை வைத்து கொண்டு, இருட்டு நேரத்தில் புதருக்குள் ஒளிந்து கொண்டார்.
மனைவியை பார்த்ததும், திரும்பவும் குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் குடிப்பழக்கம் நிறுத்தினால்தான் வாழ முடியும் என்று மனைவி சொன்னதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்துவிட்டார். ரத்த வெள்ளத்தில் மோகனேஸ்வரி சுருண்டு விழவும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் கோபி. இதையடுத்து, இவரை பிடிக்க இப்போது 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.