சேலம் ஷாக்.. குழந்தை பெற்றெடுத்த 15வயது சிறுமி, கடத்தி வந்து குடும்பம் நடத்திய இளைஞர் மீது வழக்கு!
சேலம்: சேலத்தில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடத்திவந்து குடும்பம் நடத்திய இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
சேலம் சன்னியாசிகுண்டுவில் வசித்து கூலி வேலை செய்து வருபவர் பசுபதி(25). இவர் கடந்த 15ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமி லட்சுமியை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அழைத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
பிரசவ வார்டில் இருந்த டாக்டர் விசாரணையின்போது, சிறுமி லட்சுமிக்கு 15 வயது என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் அதே நாளில்(15ம் தேதி) சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது சுகப்பிரசவமாகும்.
எப்படி பழக்கம்
இதை அறிந்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடம் வந்து அந்த சிறுமி லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளைஞர் பசுபதிக்கு லட்சுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் குறித்து தெரிய வந்துள்ளது.
கண்டித்த பெற்றோர்
பசுபதி ஈரோட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது 15 வயதே ஆன சிறுமி லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பலமுறை லட்சுமியை திருமண ஆசையை கூறி ஏமாற்றி அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் பசுபதியை அழைத்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்.
தனியாக வீடு
இதனால் கடந்த 20.8.2019 அன்று சிறுமியை கடத்திக்கொண்டு பசுபதி எஸ்கேப் ஆனார்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வந்து லட்சுமியை திருமணம் செய்திருக்கிறார் அங்கேயே சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் சேலம் சன்னியாசி குண்டுக்கு அழைத்து வந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்திருக்கிறார்.
போஸ்கோ சட்டம்
அப்போது அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பசுபதி மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது சிறுமியுடன் கணவரான பசுபதி மருத்துவமனையில் இருந்து கவனித்து வருகிறார்.
போலீசார் ஆலோசனை
இவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத இரு குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். பசுபதி தான் சிறுமியை உடன் இருந்து கவனித்து வருவதால் உடனடியாக கைது செய்வதா? அல்லது சிறுமி டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்வதா? என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.