32கிமீ தொலைவில் நோயாளி.. டெலி ரோபோடிக்ஸ் உதவியுடன் ஹார்ட் ஆபரேசன்.. இந்தியா புதிய சாதனை!
டெலி ரோபோடிக்ஸ் உதவியுடன் ஹார்ட் ஆபரேசன் செய்து மருத்துவ உலகில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
அகமதாபாத்: டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 32 கி.மீ. தொலைவில் உள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார் அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் தேஜாஸ் படேல்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அபெக்ஸ் ஹார்ட் நிறுவனத்தின் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பவர் தேஜஸ் பட்டேல். இவர், காந்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த புதன்கிழமையன்று இதய அறுவைச் சிகிச்சையை டெலி ரோபோடிக்ஸ் முறையில் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், நோயாளி இருந்தது காந்தி நகர் மருத்துவமனையில், மருத்துவர் இருந்ததோ அங்கிருந்து 32 கிமீ தொலைவில். அதிவேக இண்டர்நெட் சேவையின் மூலமாக டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார் தேஜஸ்.
அமெரிக்காவுக்கு பின் குஜராத்தில்தான் டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இது பற்றி தேஜஸ் கூறுகையில், “டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீண்ட ஆய்வுக்ககுப் பின்பே இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
Miracles do happen when you have come so far in field of Science & Technology. A doctor performing the world's 1st in-human telerobotic coronary intervention from Akshardham on patient located 32 kms away in Ahmedabad, is a proof of that. I extend my greetings to Dr. Tejas Patel pic.twitter.com/kTHEfwMice
— Poonamben Maadam (@PoonambenMaadam) December 6, 2018
இந்த டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மேலும் விரிவடைந்தால் கிராமப் புற மக்கள் அதிகம் பயனடைவர். சரிவர மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லாடும் குக்கிராமங்களில் வாழ்வோரும் இதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சைப் பெற முடியும். நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறாமல் நோயாளிகள் உயிரிழப்பது தடுக்கப்படும்.
குஜராத் முதல்வர் விஜய் ருபானி இது குறித்துக் கூறுகையில், “டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் கிராமப் புறங்களில் விரிவான மருத்துவ வசதியை அளிக்க பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.