9 நாடுகளின் 14 பாடகர்களின் “விரைவில் விடிந்து விடும்” பாடல் சிங்கப்பூரில் வெளியீடு
கொரோனா... 9 நாடுகளின் 14 பாடகர்களின் “விரைவில் விடிந்து விடும்” பாடல் சிங்கப்பூரில் வெளியீடு
சிங்கப்பூர்: கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தொண்டுள்ளம் கொண்டு அரும்பணி ஆற்றி வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த தொண்டூழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவும், துயரில் வாடும் பொதுமக்களுக்கு தன்முனைப்பு மற்றும் உற்சாகம் ஏற்படும் வகையில், நம்பிக்கையூட்டும் நற்செய்திகளை எடுத்துரைத்து இயல்பான வாழ்வைத் தொடர ஊக்குவிப்பதற்காகவும், சமூக நலனைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரில் "விரைவில்விடிந்து விடும்" என்ற எழுச்சிப் பாடல் ஃபேஸ்புக் (முகநூல்) நேரலையில் வெளியிடப்பட்டது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் எழுதிய இப்பாடலுக்கு, சிங்கப்பூர் இசைக்கலைஞர் பாடகர் "இசை மணி" பரசு கல்யாண் இசையமைத்து காணொளியாக உருவாக்கியிருக்கிறார். சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த இளமாறன் நடராஜன், சுந்தரி, விநாயா, தீபக், பெஞ்ஜமின், டாக்டர் ராஜீவ், கணேசன் ராமமூர்த்தி, வினோத், அந்தோனி பீட்டர் பிரபு, லாவண்யா சம்பத், சங்கீதா விஜய், தீபன், சுரேஷ் மகாலிங்கம், ஜீவ் தாமேன், மஹிமா ரவி, விஜய்சங்கர்உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் முதன்முறையாக இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
சிண்டாவின் தலைமை அதிகாரி, அன்பரசு இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இப்பாடலை முகநூல் நேரலையில் வெளியீடு செய்து, இப்பாடலின் சிறப்பியல்புகளைப் பற்றி எடுத்துரைத்தார். கண்ணன் சேஷாத்ரி மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோரின் தகவல் தொழில்நுட்ப உதவியுடன், தமீம் அன்சாரிஇந்நிகழ்ச்சியை இணையம் வழி தொகுத்து வழங்கினார்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் சீன நண்பர்கள் ஒன்றுகூடி சமூக அக்கறையுடன் உருவாக்கியிருக்கும் "விரைவில் விடிந்து விடும்" என்ற எழுச்சிப் பாடல், சமய நல்லிணக்கத்திற்கும் புரிந்துணர்வுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
Recommended Video
இப்பாடலை https://youtu.be/bBIUIxRsq44 என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.