கொரோனா: சிங்கப்பூரில் முதலாவதாக 2 பேர் பலி; ஜோர்டானில் தேசிய ஊரடங்கு உத்தரவு- மீறினால் ஜெயில்!
கோலாலம்பூர்: சிங்கப்பூரில் முதலாவதாக கொரோனா தொற்று நோய்க்கு 2 பேர் பலியாகி உள்ளனர். ஜோர்டான் நாட்டில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் படுதீவிரமாக இருந்து வருகிறது. சீனாவை விஞ்சும் வகையில் இத்தாலி, ஈரானில் உயிர்பலிகள் தொடருகின்றன.
அதேநேரத்தில் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஜோர்டானில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.'
ஜோர்டான், ஆஸ்திரேலியா
ஜோர்டானில் காலவரையின்றி தேசிய ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அரசின் தடையை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதால் சிட்னி கடற்கரையை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 874. ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது
சிங்கப்பூரில் 2 பேர் பலி
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தாக்குதலில் முதலாவதாக 2 பேர் பலியாகி உள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 26 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த மூதாட்டி உயிரிழந்தார். இதேபோல் இந்தோனேசியாவைச் சேர்ந்த 64 வயது முதியவரும் கொரோனாவால் சிங்கப்பூரில் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ இரங்கல்
சிங்கப்பூரில் முதலாவதாக கொரோனா தாக்குதலுக்கு 2 பேர் பலியாகி இருப்பது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூரில் மேலும் அதிகமான இழப்புகள் நேரிடலாம். சிங்கப்பூர் மக்கள் மனதளவில் தயாராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியா அமைச்சர்
இதனிடையே இந்தியா, ஈரானில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை தாயகம் அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியா அமைச்சர் கமருதீன் உறுதி அளித்துள்ளார். அதேநேரத்தில் கொரோனாவின் உக்கிரம் அதிகமாக இருக்கும் இத்தாலியில் தவிக்கும் மலேசியர்களை மீட்க சற்று காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 1,519 மலேசியர்கள் தவிப்பதாகவும் இவர்களில் 1,116 பேரை உடனடியாக மலேசியாவுக்கு திரும்ப அழைப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மலேசியா அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். இதற்கான சிறப்பு விமானங்கள் சென்னைக்கும் திருச்சிக்கும் இயக்கப்பட உள்ளன.