கொரோனா 2வது அலை: எப்படி பரவுகிறது என தெரியவில்லை.. பல நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு! இந்தியா நிலை?
சிங்கப்பூர்: ஆசிய பசிபிக் முழுவதிலும் உள்ள நாடுகள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் போராடி வருகின்றன. எப்படி பரவுகிறது என்பது தெரியாமல் தடுமாறுவதுதான் இப்போது பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங்கைப் போலவே பிற அரசுகளையும் லாக்டவுனை நோக்கி தள்ளுகிறது இந்த விவகாரம்.
"கொரோனா பரவலை நீங்கள் லேசாக நினைக்க கூடாது. ஏனென்றால் அவை அடுத்து எங்கு வரும் என்று உங்களுக்குத் தெரியாது," என்று சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் யாங் கோங்குவான் தெரிவித்துள்ளார். "எங்கிருந்து பரவுகிறது என்பது பற்றி தெரியாத சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும்போது, இதைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடித்து.. கேக் வெட்டி.. உற்சாக வரவேற்பு.. இவர் எலெக்ஷன்லலாம் ஜெயிக்கல.. என்னானு பாருங்க!
பொதுப் போக்குவரத்து
அறியப்படாத கொரோனா பரவல் தென் கொரியா மற்றும் ஜப்பானில் மட்டுமே, ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. பிற நாடுகளில் நிலைமை சரியில்லை. பொதுவாக ஆசிய நாடுகள் பலவும் பள்ளிகள் அல்லது பணியிடங்களை மூடியுள்ளன. ஆனால் மீதமுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்கின்றன. பொதுப் போக்குவரத்து கூட உள்ளது. இந்த நிலையில்தான், பல நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஹாங்காங்
எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் ஹாங்காங்கிற்கு விதிக்கப்பட்டுள்ளன. ஆசியாவின் நிதி மையம் ஹாங்காங். ஆனால், இந்த மாதத்தில் மறுபடி கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது. மூன்று மாதங்களாக அங்கு கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இப்போது எங்கேயிருந்து பாதிப்பு பரவுகிறது என தெரியாத நிலையில் உள்ளது. ஹாங்காங்கில் சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இப்போது மறுபடி கட்டுப்பாடு தீவிரமாகியுள்ளது. பொது போக்குவரத்தின்போது முகக் கவசம் அணிய மறுப்பவர்களுக்கு $ 645 என்ற அளவுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ஆஸ்திரேலியா
மெல்போர்னில் வசிக்கும் 50 லட்சம் மக்கள் 6 வார கால லாக்டவுனுக்குள் சிக்கியுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில் ஒரு புதிய கொரோனா அலை ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அவர்களில் 51% பேருக்கு, எப்படி வைரஸ் பரவல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
இந்த இரண்டாவது அலை, தற்போது சிட்னியில் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி, ஒரு புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறும் சூழல் உள்ளது.
டோக்கியோ, ஜப்பான்
ஜப்பான் தலைநகர் டோக்கியோ முழு லாக்டவுனுக்கு திட்டமிட்டுள்ளது. அறியப்படாத வழிகளில் நோய்த்தொற்றுகள் பரவுகின்றன என்று எச்சரிக்கிறார்கள் ஜப்பான் ஆய்வாளர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டாவது அலை தொடங்கியபோது இதுபோன்ற அறியப்படாத கேஸ்களின் பங்கு ஐந்தில் ஒன்று என்ற அளவுக்கு இருந்தது. எனவே இயல்பாக மக்கள் வாழ்க்கையை நடத்த அரசு அனுமதித்தது. ஆனால் அறியப்படாத பரவல்கள் பங்கு இப்போது சுமார் 45% ஆக உயர்ந்துள்ளதால், எச்சரிக்கை நிலை தேவைப்படுகிறது. வணிக நிறுவனங்களை மூடுமாறு கட்டாயப்படுத்த ஜப்பானிய அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. எனவே, நாட்டின் நிதியமைச்சர் யசுதோஷி நிஷிமுரா, இரவு விடுதிகளில் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் மூடப்படும் என எச்சரித்தார்.
தென் கொரியா
விரைவான சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் தென் கொரியாவை உலகமே பாராட்டுகிறது. ஆனால் அங்கும் இப்போது கொரோனா மறுபடி அலை வீசுகிறது. யாரிடமிருந்து பரவுகிறது என்பது தெரியவில்லை. வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி விஞ்ஞானிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை, அது காற்றில் பறக்கிறதா, எவ்வளவு காலம் பறக்கும் அல்லது நீடிக்கும்? போன்றவை தெரியவில்லை.
எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எப்படியான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.