பத்துமலை முருகனுக்கு அரோகரா..!! மலேசியாவில் தைப்பூசத்திருவிழா கொண்டாட்டம்
பத்துமலை:தைப்பூச திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள், பத்துமலை முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழாவாகும். இந்தாண்டு தைப் பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப் பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
கோயில்களில் விசேஷ பூஜைகள்
தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா உண்டு. அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
சிவபெருமானுக்கும் பூஜைகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில், தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். முருகப் பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
உலகம் முழுவதும் கொண்டாட்டம்
தமிழகம் மட்டுமல்லாது, முக்கிய திருவிழாவான தைப்பூசம், உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் கோயில்களில் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர்.
பத்துமலை கோயிலில் விழா
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகவும், உற்சாகமாகவும், பக்தி பரவசத்துடனும் கொண்டாடப் பட்டது. லட்சக்கணக்கானோர் முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நேர்த்திக்கடன்கள் செலுத்திய பக்தர்கள்
காவடிகள் ஏந்தியும், முதுகில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பத்துமலை முருகனை மனமுருக வேண்டி அவர்கள் வழிபட்டனர்.
படிகளேறி வழிபாடு
பத்து மலை குகையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்கு, 272 படிகள் ஏறிச் சென்று பக்தர்கள் வழிபட்டனர். 125 ஆண்டுகளை கடந்தும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூரிலும் வழிபாடு
மலேசியா மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் ஏராளமான தமிழர்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இதனால், இரு நாடுகளிலும் உள்ள முக்கிய நகர வீதிகள், விழாக்கோலம் பூண்டன.
புகைப்படங்கள்: துரைராஜன் உமாசங்கர், கோலாலம்பூர்