மன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து!
கோலாலம்பூர்: காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநாவில் பேசியதற்காக எந்த விதமான மன்னிப்பும் கேட்க முடியாது என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஐநாவில் குரல் எழுப்பி இருந்தது. இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் இந்த நாடுகள் நேரடியாக தலையிட்டது.
அதிலும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை வன்மையாக கண்டித்து இருந்தார். ஐநா சபையில் காஷ்மீர் சிறப்பு அதிகார நீக்கத்திற்கு எதிராக இவர் பேசியது பெரிய அளவில் எதிர்ப்புகளையே சந்தித்தது.
மலேசியா ஊழல் வழக்கு- மாஜி பிரதமர் நஜீப்-க்கு 12 ஆண்டு சிறை- ரூ370 கோடி அபராதம்- பிரம்படியில் விலக்கு
இறக்குமதி
இதனால் மலேசியாவில் இருந்து இந்தியா இந்த வருட தொடக்கத்தில் பால்ம் ஆயில் இறக்குமதியை நிறுத்தியது . இதனால் இந்தியா மலேசியா உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது . மலேசியாவின் பொருட்களை இறக்குமதி செய்வதை மொத்தமாக நிறுத்த இந்தியா யோசனை செய்தது . ஆனால் அதற்குள் மலேசியாவின் பிரதமராக முஹைதீன் யாசீன் தேர்வானார். இதனால் இரண்டு நாட்டு உறவில் கொஞ்சம் தற்போது முன்னேற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது .
என்ன சொன்னார்
இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநாவில் பேசியதற்காக எந்த விதமான மன்னிப்பும் கேட்க முடியாது என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐநாவில் காஷ்மீர் குறித்து பேசினேன். தற்போது நான் பேசியது எல்லாமே அங்கு உண்மையாகி வருகிறது.
கேட்க முடியாது
என்னுடைய பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் இதனால் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இந்தியா செய்த அநீதியை எதிர்த்ததற்கு நாங்கள் கொடுத்த விலை இது என்று நினைக்கிறேன். அரசியல் ரீதியான பிரச்சனை வரும் என்று தெரிந்துதான் இப்படி பேசினேன். தைரியமாக என் குரலை வெளிப்படுத்தினேன்.
இனி பேசுவேன்
நான் இப்போது பிரதமர் கிடையாது. இனி நான் வெளியுறவு கொள்கை குறித்து பயப்பட தேவையில்லை . எந்த கவலையும் இன்றி நான் பேச முடியும். இந்தியாவுடன் உறவு பாதிக்கும் என்ற கவலை இன்றி நான் காஷ்மீர் குறித்து பேச முடியும். காஷ்மீரில் லாக்டவுன் போடப்பட்டு ஒரு வருடம் ஆனது குறித்து குலாலம்பூரில் பேச இருக்கிறேன் , என்று மகாதீர் முகமது குறிப்பிட்டுள்ளார்.