சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்கு கடற்கரை பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் பல இன சமூகத்தினரும் கலந்து கொண்ட குடும்ப தின விழாவைச் சிறப்பாக கொண்டாடியது.
கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் திரு. முஹம்மது கௌஸ் வாழ்த்துரை வழங்கினார்.
"இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாசாரப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன" என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் டாக்டர் மு. அ. காதர்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், அதிர்ஷ்டக் குலுக்கு போன்றவைகள் விழாவில் இடம் பெற்றன.
பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றி சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு. அமானுல்லாஹ் நன்றி கூறினார்.