ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்
சிங்கப்பூர்: சுற்றியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உருமாறிய கொரோனா குறித்த செய்திகளும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசியே ஒரு நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசர், மாடர்னா, ஆகஸ்போர்ட் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கும் பணிகளும் பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி
ஆசியாவிலேயே முதல் நாடாக ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்குக் கடந்த டிசம்பர் மாதமே சிங்கப்பூர் ஒப்புதல் அளித்தது. அதன்படி டிசம்பர் 28ஆம் தேதி முதல் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாகச் சுகாதார பணியாளர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் தயக்கம்
சிங்கப்பூரில் இருக்கும் கிட்டத்தட்ட 60% மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தயாராக உள்ளதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்தது. இருப்பினும், தீவு நாடான சிங்கப்பூரில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதாலும், வேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசிகளால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற கவலையாலும் சிங்கப்பூர்வாசிகளில் சிலர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர்
இந்நிலையில், தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங், மக்கள் முன்னிலையில் நேற்று தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவருக்குச் செலுத்தப்பட்டது.
பிரதமர் வேண்டுகோள்
தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 68 வயதான பிரமதர் லீ சியன் லூங் பேசுகையில், "இந்த கொரோனா தடுப்பூசி நமக்குப் பாதுகாப்பைத் தரும். மேலும், இது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பானவர்களாக மாற்றும். எனவே தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
சிங்கப்பூரின் திட்டம்
தற்போது முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அடுத்த மாதம் முதல் நாட்டில் இருக்கும் முதியவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்றும் லி சியன் குறிப்பிட்டார். சிங்கப்பூர் தற்போது ஃபைசர் தடுப்பூசிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. மாடர்னா உள்ளிட்ட மற்ற தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அந்நாடு ஆலோசனை செய்து வருகிறது. சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக லி சியன் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டில் தளர்வுகள்
சுமார் 57 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூரில் விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள குறிப்பிட்ட அளவு மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் மற்ற நாடுகளுடனான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாகச் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.