சிங்கப்பூரில் திடீரென வேகமெடுத்த கொரோனா வைரஸ்.. லாக்டவுன் தளர்த்தப்பட்ட பின்னர் பரவுவதால் அதிர்ச்சி
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று ஒரு நாளில் மட்டும் 142 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சிங்கப்பூரில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால் லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகத்தில் பரவுவது அந்நாட்டில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி மாதம் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியபோது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். கடுமையான கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் உள்நாட்டின் உள்ளேயே திடீரென நேற்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
142 பேருக்கு புதிதாக கொரோனா
இதனால் சிங்கப்பூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,623 ஆக உயர்ந்துள்ளது., ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் சுகாதாரத்துறை வெளியிட்ட கணக்குப்படி, நேற்று மட்டும் 142 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 40 பேருக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலிருந்து பரவியிருக்கின்றது. நேற்று முன்தினம் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தொற்று ஏற்பட்ட 39 பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மக்கள் அச்சம்
இந்த சூழலில், சுமார் 20,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் கட்டுமானம் முதல் தூய்மைப்பணி வரை பல்வேறு துறைகளில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக பணியாற்றும் இத்தொழிலாளர்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றனர். தற்போது இத்தொழிலாளர்களுக்கு இடையே கொரோனா தொற்று பரவிக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூரில் ஊரடங்கு
மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் சமூக ஒன்றுக்கூடலை தடை செய்யும் விதமாக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லாக்டவுன் நீடித்தால்
உலகெங்கிலும் உள்ள நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரங்களை மீட்டெடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை எப்போது, எப்படி தளர்த்துவது என்ற சிக்கலான சூழ்நிலையில் உள்ளன. ஊரடங்கை தளர்த்தாவிட்டால் உலகப் பொருளாதாரத்திற்கே பேரழிவுக்கு வழிவகுக்கும் நிலை எற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு வரை வீழ்ச்சியடையும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.