தொடங்கியது அடுத்த அலை?? உச்சத்தில் கொரோனா உயிரிழப்புகள்.. சிங்கப்பூர் அரசு எடுத்த முக்கிய முடிவு
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரித்த தொடங்கியுள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகின் எந்த நாட்டிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மேலும், கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.. பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மெல்லத் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை மட்டும் சிங்கப்பூரில் 3,800 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொடங்கியது முதல், அங்குப் பதிவு செய்யப்படும் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.
ஊரடங்கு நீட்டிப்பு
இதையடுத்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கை ஒரு மாத காலம், வரும் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் இயல்பு நிலை திரும்ப அதிக காலம் தேவைப்படுகிறது. இதனால் சுகாதார கட்டமைப்பில் இருக்கும் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என நம்புகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வேக்சின் பணிகள்
சிங்கப்பூர் அரசு 'ஜீரோ கொரோனா' திட்டத்தைக் கடந்த ஜூன் மாதம் கைவிட்டது. அதற்குப் பதிலாக கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் புதிய திட்டம் போடப்பட்டது. அங்கு மின்னல் வேகத்தில் நடந்து வரும் வேக்சின் பணிகளால் கடுமையாக ஊரடங்கு தேவைப்படாத நிலையே இருந்தது. அங்குள்ள மக்கள்தொகையில் இதுவரை 85% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 49.84% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இருப்பினும், சமீப காலங்களில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குப் பிறகு, தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தீவிர பாதிப்பு இல்லை
சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தாலும் கூட, வேக்சின் பணிகளால் தீவிர கொரோனா பாதிப்பு பெரியளவில் ஏற்படவில்லை. கடந்த 28 நாட்களில் சிங்கப்பூரில் பதிவான கொரோனா கேஸ்களில் சுமார் 98.7% அறிகுறியற்ற லேசான கொரோனா பாதிப்பாகவே இருந்துள்ளது. வெறும் 0.1% பேருக்கு மட்டுமே ஐசியு வார்டுகளில் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. 60 வயதைக் கடந்த வேக்சின் போடாதவர்கள் மத்தியிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.