600 தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பிரியாணி.. சிங்கப்பூர் இந்திய தொழிலதிபர் அசத்தல்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய தொழிலதிபரான துஷ்யந்த் குமார் என்பவரும், அவரது மனைவியும் இணைந்து 600 இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு சூப்பர் ரம்ஜான் விருந்தை அளித்து மகிழ்வித்துள்ளனர்.
சிங்கப்பூரும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பவில்லை. அங்கும் 30,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடுகளில் அதிக பாதிப்புகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் சிங்கப்பூரும் உள்ளது. இங்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூரிலும் ரம்ஜான் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் லாக்டவுன் அமலில் உள்ளதால் விடுமுறை வெளியில் போய் கொண்டாட முடியவில்லை.
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து
600 பேருக்கு பிரியாணி விருந்து
இந்தியத் தொழிலாளர்களும் கூட இந்த விடுமுறை நாளை தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே கழிக்க நேரிட்டது. இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிசினஸ்மேன் துஷ்யந்த் குமாரும், அவரது மனைவியும் இணைந்து 600 இந்தியத் தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து மகிழ்வித்துள்ளனர்.
இதற்காக சமையல் கலைஞர்களை வைத்து பிரியாணி சமைத்தார் துஷ்யந்த் குமார். மேலும் தென்னிந்திய உணவு வகைகளையும் அவரது சமையல் குழு சமைத்து மாபெரும் விருந்தாக இதை மாற்றியது. இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு நாட்டு தொழிலாளர்களும் கூட இந்த விருந்தில் கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
மகிழ்ச்சி மன நிறைவு
இதுகுறித்து துஷ்யந்த் குமார் கூறுகையில், வழக்கமான நாளாக இருந்திருந்தால் குடும்பத்துடன் இருந்திருந்தால், விதம் விதமாக சமைத்து சாப்பிட்டு வெளியில் போய் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் அனைவரும் தற்போது முடக்கத்தில் மாட்டிக் கொண்டு விட்டனர். தனித்திருக்கும் அவர்களுக்கு இந்த விருந்து கொஞ்சமாவது மகிழ்ச்சி கொடுத்திருந்தால் அது எனக்கு மன நிறைவைக் கொடுக்கும் என்று தெரிவித்தார்.
30,000 பேர்
சிங்கப்பூரில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் அவர்களுக்காக கட்டப்பட்டுள்ள பிரத்யேகமான டார்மிட்டரி குடியிருப்பில்தான் தங்க வேண்டும். ஒவ்வொரு பெரிய அறையிலும் 12 முதல் 20 பேர் வரை தங்கியிருக்கிறார்கள். இவர்களால் வெளியில் போக முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் துஷ்யந்த் குமார் இந்த பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆயிரம் பேருக்கு தினசரி மதிய உணவு
துஷ்யந்த் குமார் மேலும் கூறுகையில், எனது நண்பர்கள், பல்வேறு அமைப்புகளும் இதில் கை கொடுத்தனர். அனைவரும் இணைந்து இந்த சிறப்பு விருந்தை சாத்தியமாக்கினோம். தொழிலாளர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது என்றார் அவர். இவர் இது மட்டுமல்ல.. கடந்த ஏப்ரல் மாதம் முதலே தினசரி 1000 பேருக்கு மதியஉணவு அளித்து வருகிறார் என்பது கூடுதல் செய்தியாகும்.