சிங்கப்பூர் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு - இரு இடங்களில் நடந்த பதவிப்பிரமாணம்
பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை சிங்கப்பூரில் பதவியேற்றுள்ளது.
சிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை சிங்கப்பூரில் பதவியேற்றுள்ளது. இதில் 5 தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
திரு கா. சண்முகம், எஸ் ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்,இந்திராணி ராஜா ஆகிய தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 37 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக இளையவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் அதன் மோசமான நெருக்கடிக்கு செல்லும் இந்த வேளையில் புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியில் 15 துறைகளில் ஆறு அமைச்சர்கள் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் டான் சீ லெங், 55 , மூத்த அமைச்சர்கள் தியோ சீ ஹீன் மற்றும் தர்மன் சண்முகரத்னம் உட்பட பெரும்பாலான பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த ஆண்டு முதன்முறையாக இஸ்தானா, நாடாளுமன்றம் என 2 இடங்களில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.
இஸ்தானாவில், அமைச்சர்களும் விருந்தினர்களும் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்தனர். அதிபர் ஹலிமா உரை நிகழ்த்தி பதவியேற்புச் சடங்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் பதவியேற்றுள்ளனர்.
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவரும் கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்தை கேமரா முன்பாக காட்டி அதிபரின் ஒப்புதலைப் பெற்றனர். ஹெங்கைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர், இஸ்தானாவில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இரு இடங்களிலும் மாறிமாறி அரசியல் பொறுப்புகளை வகிக்கும் 33 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 7 மூத்த துணை அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 7 புதிய உறுப்பினர்களும் அவர்களில் அடங்குவர். புதிய உறுப்பினர்களில் ஆறுபேர் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர், பிரதமர் லீ, சிங்கப்பூரின் வருங்காலம் குறித்து உரையாற்றிப் பதவியேற்புச் சடங்கை நிறைவு செய்து வைத்தார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நிதியாமைச்சராகத் தொடர்வதுடன், பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். 55 வயதான டாக்டர் டான் சீ லெங் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் மனிதவளத்துறை, வர்த்தக, தொழில் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். லாரன்ஸ் வோங் கல்வி அமைச்சராகவும். டெஸ்மண்ட் லீ தேசிய வளர்ச்சி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
கல்வி அமைச்சராகப் பணியாற்றிய திரு ஓங் யி காங், போக்குவரத்து அமைச்சரானார். சுற்றுப்புற, நீர்வள அமைச்சராக திருவாட்டி கிரேஸ் ஃபூ பதவியேற்றார். மசகோஸ் ஸுல்கிஃப்லி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்றார்.
மூத்த துணை அமைச்சர்களாக இருந்த இருவர் அமைச்சர்களாகியுள்ளனர். திரு எட்வின் டோங் கலாசார, சமூக, இளைஞர் துறை அமைச்சராகவும் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் கல்வி மற்றும் வெளியுறவு துறையின் இரண்டாம் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு டியோ சீ ஹியன் மூத்த அமைச்சராகவும், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்கிறார்.
தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
திரு கா. சண்முகம், எஸ் ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர். இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.