சிங்கப்பூரில் இடைவிடாது தாக்கும் கொரோனா- 20 ஆயிரத்தை நெருங்குகிறது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது.
தென்னாசிய நாடுகள் இந்தியா, சீனாவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனாவில் தாக்கம் மிக அதிகமாக தொடருகிறது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்குத்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் சிங்கப்பூரில் வெளிநாட்டினர் தங்கும் இடங்கள் தீவிர கண்காணிப்புக்குட்பட்டுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் இன்று 632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்றும் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள்தான். சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் 9 பேர்தான். இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,410 ஆக அதிகரித்தது.
இதேபோல் மலேசியாவில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,383 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் பலியானார். இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்தது.