கொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்கள்தான் கொரோனா மையங்களாக உருவாகி உள்ளன. நாள்தோறும் 700 முதல் 1400 வரை என்கிற எண்ணிக்கையில் புதியதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உச்சகட்ட துயரம்: கொரோனா மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது
12 ஆயிரத்தை தாண்டியது
இன்றும் ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலும் பெரும்பாலானோர் வெளிநாட்டினர்தான். சிங்கப்பூரை சேர்ந்த 13 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 12,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் சிங்கப்பூரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12.
இலங்கையில் புதியதாக 48 பேருக்கு தொற்று
இதேபோல் இலங்கையில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள் எண்ணிக்கை 7 ஆகும். இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 109.
100 நெருங்கும் மலேசிய மரணங்கள்
மலேசியாவில் கொரோனாவால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96. அதேபோல் மேலும் 88 பேருக்கு மலேசியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5691 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் 242 பேர் பலி
பாகிஸ்தானிலும் கொரோனா உக்கிரமாக தாக்கி வருகிறது. இங்கு இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனாவால் மொத்தம் 11,562 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில்தான் மிக அதிகமாக 4,851 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானில் மே 9-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.