இதுதான் முதல் முறை.. Zoom வீடியோ கால் வழியாக தீர்ப்பு சொன்ன நீதிபதி.. புனிதன் கணேசனுக்கு மரண தண்டனை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக ஜூம் வீடியோ கால் மூலமாக, குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளார் நீதிபதி. இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் புனிதன் கணேசன். தற்போது இவருக்கு வயது 37. இவர் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டில் சிக்கி இருந்தார்.
2011ம் ஆம் ஆண்டு ஹெராயின் எனப்படும் போதை மருந்து கடத்தியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது முதல் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
சிங்கப்பூரை பொறுத்தளவில் போதை மருந்து விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடிய நாடு. சிறிதளவும் சகிப்புத்தன்மை காட்டப்படாது. போதை மருந்து கடத்தலுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டங்கள் வலிமையானவை.
லாக்டவுனால் வந்த சிக்கல்.. ஆம்பன் புயல் வேகம் அதிகரிக்க இப்படி ஒரு காரணமா?.. சூப்பர் புயலின் பின்னணி
நீதிமன்றங்கள் நடைபெறவில்லை
புனிதன் கணேசன் வழக்கு விவகாரத்தை பொருத்தளவில் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களாக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறவில்லை.
மேல்முறையீடு
இந்த நிலையில்தான் ஜூம் கால் மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதி, புனிதன் கணேசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். புனிதன் கணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பீட்டர் பெர்னாண்டோ இதுபற்றி கூறுகையில், நீதிபதியின் தீர்ப்பு ஜூம் கால்வழியாக வந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு மட்டுமே
அதேநேரம் மனித உரிமை ஆர்வலர்கள் இதுபோன்று வீடியோ மூலமாக மரண தண்டனை போன்ற உச்சபட்ச தீர்ப்புகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், வழக்கறிஞர் பீட்டர் பெர்னாண்டோ இதை எதிர்க்கவில்லை. வாத விவாதங்கள் முடிவடைந்துவிட்டது. தீர்ப்பு மட்டுமே வெளியானது. அதை வீடியோ காலில் தெரிவித்து தவறு இல்லை என்று நினைக்கிறேன் என்கிறார் அவர்.
எதிர்ப்புகள்
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடித்து வரும் நிலையில் இந்த தீர்ப்புக்கு ஏன் அவசரம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். வீடியோகால் மூலமாக நீதிபதி ஒருவர் மரண தண்டனை விதித்தது, அங்கு, இதுதான் முதல் முறை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மரண தண்டனை என்பது மனிதாபிமானமற்றது. அதிலும் வீடியோ கால் மூலமாக இது போன்ற தண்டனைகளை பிறப்பிப்பது அதைவிட மோசமானது என்கிறார் ஆசிய பிராந்தியத்துக்கான மனித உரிமை கண்காணிப்பக துணை இயக்குனர் பில் ராபர்ட்சன்.