இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை
சிங்கப்பூர்: டெல்லியில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக கடுமையான பனி, குளிரில் மத்திய அரசுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது கோரிக்கை.
இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன. விவசாயிகளைப் பொறுத்தவரையில் போராட்டத்தைத் தொடருவதில் உறுதியாக உள்ளனர்.
6 மாதம் என்ன...மோடியின் ஆட்சிக் காலம் முடியும்வரை போராட்டத்தை தொடருவோம்- விவசாய சங்கங்கள் 'வார்னிங்'
இந்த நிலையில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள், படங்கள் பகிரப்பட்டிருந்தன. இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில், சிங்கப்பூரில் நடந்ததாக கூறப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான பதிவுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு ஆர்ப்பாட்டத்துக்கும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. காவல்துறை அனுமதி இல்லாமல் ஒன்றுகூடுவது சட்டவிரோதம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.