சிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற "வாசிக்கலாம் வாங்க" நிகழ்ச்சி
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளையும்), சிங்கப்பூர் தேசிய நூலக வாரியமும் இணைந்து "வாசிக்கலாம் வாங்க" என்ற நிகழ்ச்சியை 24-11-2018 அன்று, சிங்கப்பூர் விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக கட்டிடத்தில் சிறப்பாக நடத்தியது.
சிங்கப்பூரில் குடும்பத்துடன் நூலகத்திற்கு சென்று, தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு துணை இயக்குநர் திருமதி. சாந்தி செல்லப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
தேசிய நூலக தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு. அழகிய பாண்டியன், நூலகத்தில் கிடைக்கும் வளங்களையும் வசதிகளையும் பற்றி எடுத்துரைத்தார். சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழக பேராசிரியர் முனைவர் அனிதா தேவி பிள்ளை, முனைவர் சியா டி யோங் அலெக்ஸியஸ் ஆகியோர் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர்.
கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்தாளாருமான திரு. ஷாநவாஸ் நிகழ்ச்சியை வழி நடத்தினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெற்றனர்.