சிங்கார சிங்கப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்... மீட்பு விமானம் ரத்து செய்யப்பட்டதால் கலக்கம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட இருந்த மீட்பு விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள தமிழர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
உலகின் மற்ற நாடுகளை விட சிங்கப்பூரில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக டெல்டா பகுதிகளான தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவு சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர்.
எல்லோருக்கும் ஜஸ்ட் 40-ஐ ஒட்டிய வயதுதான்.. கொரோனாவால் சென்னையில் நேற்று 3 பேர் பலியான பின்னணி
வேலை இழப்பு
சிங்கப்பூரை பொறுத்தவரை லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், துறைமுகம் உள்ளிட்ட துறைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வரும் சூழலில், கடந்த மார்ச் மாதம் பலரும் வேலை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலரும் பணிகளை இழந்து ஊர் திரும்ப முடியாமல் கடந்த இரண்டு மாதங்களாக நெருக்கடியான கட்டிடத்தில் வசித்து வருகின்றனர்.
வேதனை
சிங்கப்பூரில் லைவ் ஆஃப் காஸ்ட் அதிகம் என்பதால் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் அங்கு இருப்பதற்கு சிரமப்படுகின்றனர். நாமக்கல்லை சேர்ந்த மைதிலி என்ற ஐடி ஊழியர் இது குறித்து கூறுகையில், தனது அம்மா இருதய பிரச்சனை உடையவர் என்றும் அவருக்கு தமிழகத்தில் ரூ.1500-க்கு வாங்க வேண்டிய மருந்துகள் சிங்கப்பூரில் ரூ.6,000-க்கு வாங்கியதாக தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் தனது அம்மா தமிழகம் திரும்புவதற்கு விமான டிக்கெட் பதிவு செய்திருந்த நிலையில் ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கிறார்.
பணி இல்லை
இதேபோல் மயிலாடுதுறையை சேர்ந்த சதீஷ்குமார் -பாரதி தம்பதி, தனது பிள்ளைகளை ஊரில் உள்ள தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் பாரதி பணியை இழந்துள்ளார். அவரது கணவர் சதீஷ்குமார் மட்டுமே பணியில் இருக்கிறார். இந்த சூழலில் பாரதி மீண்டும் ஊர் திரும்ப காத்திருக்கிறார். இதனிடையே கர்ப்பிணி பெண்களும், நோயாளிகளும் சொந்த ஊர் செல்வதற்காக பதிவு செய்தும் அவர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
மேலும், ராமசுப்பிரமணியன் என்பவரோ மார்ச் மாதமே வேலையை இழந்துவிட்டதால் சிங்கப்பூரில் குடும்பம் நடத்துவது மிக சிரமமாக உள்ளதாகவும், அங்கு காய்கறி, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தமிழகத்தை விட 5 மடங்கு அதிகம் எனவும் கூறுகிறார். இந்த சூழலில் தமிழக அரசு தங்களை பற்றி கவனத்தில் கொண்டு சிங்கப்பூரில் இருந்து மீட்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு மீட்பு விமானங்கள் இயக்கப்படும் போது சிங்கப்பூரில் இருந்து மட்டும் ஏன் இயக்கப்படவில்லை என்ற காரணத்தை இதுவரை உரிய அதிகாரிகள் விளக்கவில்லை என சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.