மோசமான முருகன் சார்.. அரசு வக்கீலும் உடந்தை.. சிறுமிகள் பகீர்.. சிவகங்கை பலாத்கார வழக்கில் திருப்பம்
சிவகங்கை: பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிகளை, சம்மந்தப்பட்ட குற்றவாளியிடமே சமரசம் பேச அரசு தரப்பு வழக்கறிஞர் அனுப்பி வைத்தார், அதுவும், கோர்ட்டில் வைத்தே இந்த சந்திப்பு நடந்தன என்ற பகீர் குற்றச்சாட்டு சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன், துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகன். இவர் அதே பள்ளியில் பயின்ற 10 வயதுக்கு உட்பட 6 சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் மற்றும் சீண்டல் செய்ததாக 2015ல் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் ஒரு சிறுமியை, கழிவறையில், வைத்து, தலைமையாசிரியர் முருகன், பலாத்காரம் செய்துள்ளார். பிற மாணவிகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளிக்க.. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிற மாணவிகள் தரப்பும் புகார் அளித்தது.
மாற்றி கூறினர்
2016ம் ஆண்டு, சிவகங்கை மகளிர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்தது. சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக இந்திரா காந்தி (தற்போது வயது 54) என்ற பெண் ஆஜரானார். இந்த வழக்கில், சிறுமிகள் அனைவருமே, நீதிமன்றத்தில், பிறழ் சாட்சியாக மாறினர். அதாவது, தங்களை தலைமையாசிரியர் பலாத்காரமே செய்யவில்லை என அவர்கள் கூறிவிட்டனர். இது அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்த வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறது.
காவல்துறை ஆய்வு
இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்டதில் 3 சிறுமிகள், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். சிவகங்கை எஸ்பியாக ரோகித் நாதன் பொறுப்பேற்றதும், நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, காவல்துறை ஆய்வு செய்துள்ளது. அப்போதுதான், அனைத்து வகை ஆதாரங்கள் இருந்தும், முருகனுக்கு எதிரான வழக்கு பலவீனமான நிலையில் இருப்பதை தெரிந்து கொண்டார் எஸ்.பி. உடனடியாக, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமி வீடுகளுக்கு சென்று விசாரித்தபோதுதான், தாங்கள் ஏன் பல்டியடித்தோம் என்ற திடுக்கிடும் தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகள் பல்டி
அதாவது, தலைமையாசிரியர் முருகன், அரசு தரப்பு வழக்கறிஞரான, இந்திரா காந்தியை தனது கைக்குள் போட்டுக் கொண்டதாகவும், வழக்கில் ஆஜராக சென்றபோது, நீதிமன்றத்தில் வைத்தே, முருகனுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்த சிறுமிகளை இந்திரா காந்தி கட்டாயப்படுத்தியதாகவும், எனவேதான் தாங்கள் மாற்றி கூறியதாகவும் சிறுமிகள் ஒரே மாதிரி சொல்லியுள்ளனர். இதைக்கேட்ட போலீசாருக்கு பெரும், அதிர்ச்சி. இந்திரா காந்தி சொன்னாலும், நீங்கள் ஏன் பல்டியடித்தீர்கள் என கேட்டதற்கு, நீங்களே முருகன் கூறுவதுபடி கேட்டு நடக்காவிட்டால், பலாத்காரமே நடக்கவில்லை என நான் வாதிடுவேன். முருகனும், பலாத்காரம் செய்யவில்லை என கூறிவிடுவார். அப்புறம் கேஸ் டிஸ்மிஸ்தான் ஆகும். அதற்கு அவர் பேச்சை கேட்டு நடந்தால் எல்லோருக்கும் நல்லது என இந்திரா காந்தி கூறினார். எனவே நாங்கள் வேறு வழியின்றி நீதிபதி முன்பாக, விசாரணையின்போது, மாற்றிக்கூறினோம் என்று சிறுமிகள் கூறியுள்ளனர்.
3 பேர் முன்வந்தனர்
இதையடுத்து, இந்த சம்பவத்தையே புகாராக எழுதி தருமாறு போலீசார் கேட்டுள்ளனர். அப்போது, 3 சிறுமிகள் மட்டும் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்தனர். மற்ற 3 சிறுமிகளின் குடும்பத்தாரும், தயக்கத்தால், புகார் கொடுக்கவில்லை. பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி, போலீசில் எழுதிக் கொடுத்த புகாரில், கூறியுள்ளதை பாருங்கள்: "2016 ஏப்ரல் 25ம் தேதி நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் எங்களிடம் கூறினர். இதை அறிந்த தலைமை ஆசிரியர் முருகனும் அவரது மனைவியும் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் சாட்சியமளித்தால், தனது வேலையை இழக்க நேரிடும் என்றும் முழு குடும்பமும் தற்கொலை செய்துகொள்ளுவோம் என்றும் கூறி, எங்கள் கால்களில் விழுந்து அழுதனர். முருகனும் எங்கள் குடும்பத்திற்கு பண உதவி செய்வதாக கூறினார். ஆனால், நானும் எனக்கு ஆதரவாக உள்ள பாட்டியும், இதை ஏற்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றோம்.
சிறுமி புகார்
நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, முருகன், என்னையும் என் பாட்டியையும் அரசு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றார். அங்கே, பள்ளி கழிவறையில் என்ன நடந்தது என்று நீதிபதி கேட்கும்போது, நான் எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டும், முருகன் சார் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல வேண்டும் என்று மிரட்டினர். எனவே நானும் அப்படியே நீதிபதியிடம் கூறிவிட்டேன். இவ்வாறு அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
வேறு வக்கீல்
இதையடுத்து, இந்த வழக்கில் வேறு வக்கீலை அரசு தரப்பில் நியமிக்க காவல்துறை சார்பில், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனிடையே, இந்திரா காந்தி தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நிருபர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். தான் ஒரு சமூக சேவகி என்றும், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட தனக்கு அவசியமே இல்லை என்றும் இந்திரா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.