அப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு!
சிவகங்கை அருகே நடைபெற்ற கோயில் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்
சிவகங்கை: "அய்யனாருக்கு வருஷா வருஷம் திருவிழா நடத்தினாதானே மழையை வரவழைக்க முடியும்.. வர்ற தண்ணியை வீணாக்காமல் இளைஞர்கள் அதை சேமித்து வைக்கணும்" என்று நடிகர் வடிவேலு கோயில் விழாவில் பேசி உள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்து கொண்டிருந்தவர் வடிவேலு. அப்போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இந்நிலையில் சில வருஷங்களாகவே சினிமாவில் வடிவேலுவை பார்க்க முடியாத நிலை உள்ளது.
தேர்தல் சமயத்தில் வந்து ஓட்டு போட்டார், கூடவே ஒரு டான்ஸையும் போட்டுவிட்டு போய்விட்டார். அதற்கு பிறகு இப்போது திடீரென ஒரு மேடை நாடகத்தில் தோன்றி உள்ளார். இந்த நாடகம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கலியாந்தூர் கிராமத்தில் நடந்தது. இது அவரது மனைவியின் சொந்த ஊர்.
அய்யனார்
இந்த ஊரில் உள்ள அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார். இப்படி அய்யனாருக்கு விழா எடுத்தால் மழை பெய்யும் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. இந்த விழாவின் ஒரு பகுதியாக வள்ளி திருமணம் நடந்தது.
குத்தாட்டம்
இதனை வடிவேலு தொடங்கி வைத்தார். அப்போது மேடையிலேயே ஒரு குத்தாட்டம் போடவும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பிறகு, ஒரு பாட்டு பாட சொல்லவும். ‘எட்டணா இருந்தால்' பாடலை முழுசுமாக பாடி முடித்தார்.
இளைஞர்கள்
அப்போது பேசிய வடிவேலு, "கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான். இப்படி விழாவில கலந்துக்கிறது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? அய்யனாருக்கு அடிக்கடி இப்படி திருவிழா எடுத்து, மழையை வரவழைக்க வேண்டும். இல்லேன்னா இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியாமலேயே போய்விடும்.
விழாக்கோலம்
கிராமத்தினுடைய பண்பாடுதான் உலகத்துக்கே உதாரணமா இருக்கு. இப்போ எல்லா இடங்களிலும் தண்ணி பிரச்சனை இருக்கு. அதனால் மழை நீரை வீணாக்காமல் இளைஞர்கள் சேமித்து வைக்க முன் வரவேண்டும்" என்றார். வடிவேலு வருகையையொட்டி கலியாந்தூர் கிராமம் மட்டுமல்லாமல் சுத்துப் பட்டு கிராமங்களும் விழாக் கோலம் பூண்டு அத்தனை பேரும் வடிவேலுவைக் காண ஓடோடி வந்து விட்டனர்.