இந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. !
செல்போன் கண்டுபிடித்தவனை உதைக்கணும் என்று பாஸ்கரன் கூறியுள்ளார்
சிவகங்கை: இந்த செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், "செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால், மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது
இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்ற செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்" என்று அமைச்சர் பாஸ்கரன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ஆதங்க பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
அமைச்சரின் பேச்சு எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஆனால் இன்று செல்போன் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. அட கேஸ் புக் செய்யக் கூட செல்போன் தேவை. எதுவாக இருந்தாலும் செல்போன் தேவை. இப்படி இருக்கையில் செல்போனை தவிர்த்து விட்டு ஒருவரைப் பார்ப்பது என்பது மிகப் பெரிய கஷ்டமான விஷயம்.
சரி அதை விடுங்க.. பொது அறிவுக்கு வருவோம்.. செல்போனை கண்டுபிடிச்சவர் யார் தெரியுமா... அவர் தான் மோட்டாராலோ நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் மார்ட்டின் கூப்பர். இவர்தான் 1973ம் ஆண்டு முதல் முறையாக கையால் பேசக் கூடிய செல்போனைக் கண்டுபிடித்தவர். இவர் கண்டுபிடித்த மாடலில் பல திருத்தங்கள் செய்து 1983ம் ஆண்டு விற்பனைக்கு விட்டது மோட்டோராலோ நிறுவனம்.