அரசு மருத்துவமனையில் பிரசவம்... மனைவியின் ஆசையை நிறைவேற்றிய அதிமுக எம்.எல்.ஏ!!
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜனுக்கு கடந்த 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த அவரது மனைவி அரசு மருத்துவமனையில் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது ஆசையை நாகராஜன் நிறைவேற்றி வைத்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.நாகராஜன், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் திருமணம் ஆனது. இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதிகளுக்கு 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. 16 வருடங்களுக்குப் பின்னர் சிவசங்கரி கருவுற்றார்.
அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும், பிரசவமும் பார்க்க வேண்டும் என்று அவரது மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் கர்ப்ப காலத்தில் சிவசங்கரி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரசவத்திற்காக தனது மனைவியை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாகராஜன் சேர்த்தார். சிவசங்கரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த 9-ம் தேதி அன்றே சிவசங்கரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆகஸ்ட் 1,3,4ஆம் தேதிகளில் வீடு வீடாக டோக்கன் கொடுப்பாங்க
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பிரிவு வார்டு அருகில் தான், கொரோனா வார்டும் உள்ளது. ஆனாலும், தைரியமாக சிவசங்கரி அந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது பெரும்பாலும், தனியார் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது, இவர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்று மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்.