மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை
மானாமதுரை: மானாமதுரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் படுகொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அமமுவின் ஒன்றிய செயலாளராக இருந்தார்.
பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் அவர் வைகை ஆற்றில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மர்ம கும்பல் வந்தது.
அவர்களை கண்டதும் சுதாரித்துக் கொண்ட சரவணன் தப்பி ஓட முயற்சித்தார். எனினும் அந்த கும்பல் அவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டியது. இதனால் சரவணன் அதே இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அமமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.