மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..!
சிவகங்கை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி நேற்று முன் தினம் காலமான நிலையில் இன்று அவர் காலமாகியுள்ளார்.
உயிரோடு இருக்கும் வரை மட்டுமல்லாமல் மரணத்திலும் இணை பிரியாத தம்பதியாக மீனாட்சி ஆச்சியும் -ஏ.ஆர்.லட்சுமணனும் திகழ்ந்துள்ளனர்.
மனைவி இறந்த துயரத்தில் இருந்த ஏ.ஆர்.லட்சுமணனுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மனைவி சென்ற இடத்திற்கே அவரும் சென்றுவிட்டார்.
"தம்"முக்கு தடை விதித்தவர்.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தவர்.. மறக்க முடியாத ஏ.ஆர் லட்சுமணன்
டெல்லி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை பூர்வீகமாக கொண்டவர் ஏ.ஆர்.லட்சுமணன். வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர் படிப்படியாக முன்னேறி உச்சநீதிமன்ற நீதிபதி என்ற உயர்ந்த சிகரத்தை எட்டிப்பிடித்து சரித்திரப் புகழ்வாய்ந்த பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
சரித்திரப் புகழ்
பெண்கள் மீது ஆசிட் வீசும் நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடும் தண்டனை அளிப்பதற்கான திருத்தங்களை பரிந்துரைத்தவர். சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக, சட்ட ஆணைய அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்து பரிந்துரை செய்தார் ஏ.ஆர்.லட்சுமணன். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த போது 'சட்டக் கமிஷன் அறிக்கைகளை' மத்திய அரசுக்கு அளித்த ஒரே ஆணையத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் ஏ.ஆர்.லட்சுமணன்.
முல்லைப் பெரியாறு
மேலும், பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கும் இந்து வாரிசுரிமைச் சட்டத்திலும், இந்திய வாரிசுரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப் பரிந்துரைகள் செய்தவர் ஏ.ஆர். லட்சுமணன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை நிலை நாட்ட நெஞ்சுயர்த்தி குரல் கொடுத்தவர் ஏ.ஆர். லட்சுமணன். உச்சநீதிமன்றத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்த இவர் சிறந்த தமிழ் மொழி பற்றாளரும் கூட.
வற்றாத பாசம்
மனைவி மீனாட்சி ஆச்சி மீது வற்றாத பாசம் வைத்திருந்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், நேற்று முன் தினம் மீனாட்சி ஆச்சி மறைந்ததை அடுத்து மிகுந்த துயரத்தில் இருந்திருக்கிறார். மனைவியின் எதிர்பாராத மரணத்தை ஜீரணிக்க முடியாமல் இருந்த இவருக்கு நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்த நிகழ்வு மரணத்திலும் இணை பிரியாத தம்பதி என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறது.