கீழடியில் கிடைத்தவை என்ன? 4-ம் கட்ட அகழாய்வு அறிக்கையில் வியக்க வைக்கும் வரலாற்று தகவல்கள்!
Recommended Video
சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் தொடர்பான 4-ம் கட்ட ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்களும் எழுத்துருக்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி. வைகை நதியின் தென்கரை இடமான கீழடியில் 4 கட்ட அகழாய்வுகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வைகை நதிக் கரையில் தமிழர் நாகரிகம் சிறந்து விளங்கியதை வெளிப்படுத்தும் ஏராளமான பொருட்கள் இங்கு கிடைத்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கீழடி எனும் நூலை தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார். இந்நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
எழுத்துகளுடன் பானை ஓடுகள்
கீழடி அகழாய்வில் தமிழ்-பிராமி பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குவிரன் ஆதன், ஆதன் போன்ற பெயர்கள் மட்டுமின்றி முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.
திமில் காளை எலும்பு
இதன்மூலம் தமிழ் பிராமியின் காலகட்டம் கிமு 6-ம் ஆண்டு என கூறப்படுகிறது. இங்கு 70 எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டு புனே டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வில்தான் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகியவற்றில் எலும்புகள் என்பது உறுதி செய்யப்பட்டது. சிந்துசமவெளியில் திமிலுள்ள காளை சின்னம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோமுடன் வணிகம்
ரோமின் அரிட்டைன் பானை ஓடு கிடைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுடன் கீழடி நாகரிகத்தார் வணிகம் செய்ததற்கு சான்றாகும். பல்வேறு அளவிலான சதுரங்க காய்கள், ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.
அறிவுடைய சமூகம்
கீழடியில் கிடைத்த பெரும்பாலான தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பானை செய்யும் போதே எழுதப்பட்டதாக இல்லை. பானை செய்த பின் பொறிக்கப்பட்டவை. எழுத்து வடிவம் வெவ்வேறாக இருப்பதால் அச்சமூகம் கல்வி அறிவு கொண்டதாக திகழ்ந்திருக்கிறது.
வளமை வாய்ந்த சமூகம்
மொகஞ்சதாரோவின் பல சுவடுகள் கீழடியில் கிடைத்திருக்கின்றன. அணிகலன்கள், விளையாட்டு பொருட்கள், அரவைக் கல், கவினைப் பொருட்கள்,சுடுமண் உருவங்கள், நாணயங்கள், நெசவு பொருட்கள் ஆகியவற்றின் மூலம் கல்வியறிவு பெற்ற நாகரிக பண்பாட்டுடன் கீழடி தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர். கீழடி தொழில் செயல்பாடுகள் நிகழ்ந்த ஒரு இடமாக இருக்கலாம்.