பள்ளி மாணவிக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த மேனேஜர் - அடி வெளுத்த மக்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேனேஜரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து துவைத்துள்ளனர். காரைக்குடியில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
காரைக்குடி: மூன்று வயது சிறுமி முதல் 60 வயது பாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி வீட்டிற்கு போனால் பாலியல் தொல்லை கொடுத்து பதைபதைக்க வைக்கின்றனர். காரைக்குடியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாடத்தில் சந்தேகம் கேட்கப் போன இடத்தில் கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார் 55 வயதான வங்கி மேனேஜர். உறவினர்களிடம் சிறுமி புகார் அளிக்கவே அந்த நபரை தர்ம அடி கொடுத்து வெளுத்துள்ளனர்.
அடிவாங்கிய நபரின் பெயர் ரவிச்சந்திரன் என்பதாகும். 55 வயதாகும் ரவிச்சந்திரன் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் வசித்து வருகிறார். மானகிரியில் ஐஓபி வங்கியில் மேலாளராகவும் இருக்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது மாணவி ரவிச்சந்திரனிடம் சகஜமாக பேசுவாராம். பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதால் வழக்கம் போல ரவிச்சந்திரன் வீட்டிற்கு பாடத்தில் சந்தேகம் கேட்க சென்றிருக்கிறார்.
அப்போது திடீரென ரவிச்சந்திரன் மாணவியை தவறான நோக்கத்தோடு தொட்டிருக்கிறார். கட்டிப்பிடித்த அவர், ஆடைகளை களைத்து போட்டு நிர்வாண நிலையில் நின்றிருக்கிறார். பயந்து போன அந்த சிறுமி ரவிச்சந்திரனை தள்ளி விட்டு விட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினரிடம் போய் அழுது கொண்டே கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், ரவிச்சந்திரனை அடித்து துவைத்து காரைக்குடி மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவிச்சந்திரனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மூவரும் சென்னையில் வசித்து வரும் நிலையில் தனிமையில் தங்கி வேலை பார்த்து வந்த ரவிச்சந்திரன் தனது மகள் வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.