சூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்
சிவகங்கை: இன்று மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் சாலையில், மாற்றுத்திறனாளி .மஸ்தான் பாதுஷா என்பவர் பணி வேண்டி அளித்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, காரைக்குடி அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி பிரிவில் விவர உள்ளீட்டாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அசத்தினார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று கொரோனா ஆய்வுப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வருகை தந்தார்.
சிவகங்கை வரும் வழியில், அவரது வாகனம் மதுரை முக்கு இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரது மகன். மஸ்தான் பாதுஷா கோரிக்கை மனுவுடன் சாலையோரம் காத்துக்கொண்டிரந்தார்.
மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கையில் கோரிக்கை மனுவுடன் காத்திருப்பதைக் பார்த்த முதல்வர் பழனிசாமி தனது காரை நிறுத்தி மாற்றுத்திறனாளியிடம் மனுவைப் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவை எனக் கேட்டார். அப்போது, அவர் நான் இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுதிறனாளி . நான் பி.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ வரை படிப்பு முடித்துள்ளேன். ஆகவே, எனக்கு ஏதாவது ஒரு அரசுத்துறையில் பணியிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உடனே அரசு வேலை
மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை கனிவுடன் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ஏதாவது பணியிடம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றார். அதன்படி இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாள. மஸ்தான் பாதுஷா என்பவருக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் விவர உள்ளிட்டாளர் பணிக்கு நியமனம் செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
நெஞ்சார்ந்த நன்றி
அத்துடன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார். மனு அளித்த சில மணிநேரத்திலேயே உடனடி நடவடிக்கை எடுத்து, எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனக்குமாதம் ரூ.15,000 ஊதியம் பெறுவதற்கான வழிவகை செய்த முதல்வருக்கு மாற்றுத்திறனாளி தனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முதல்வர் உத்தரவு
ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது. மாரிஸ்வரி (28) என்ற இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி உத்தரவிட்டிருந்தார். அதன்பின்னர் தற்போதும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.,