7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு
சிவகங்கை: 7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று கொரோனா ஆய்வுப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். சிவகங்கையில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.27.46 கோடியில் 30 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.36.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறை சார்பில் 27 முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைத்தார். அத்துடன் சிவகங்கை மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க.." ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்
தமிழக அரசு பரிந்துரை
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி தெரிவித்தார்.
ஆய்வு குழு பரிந்துரை
ஒரே பிரிவினராக மாற்றினாலும் பட்டியலினத்தில் தொடர, தமிழக அரசுக்கு ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது என்றும். 7 உட்பிரிவினருக்கும் அரசின் சலுகை இப்போது போலவே தொடரும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
என்னென்ன பிரிவுகள்
தமிழகத்தில் எஸ்சி பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி மற்றும் காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கி, 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு
இந்த கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் இன்று 7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்கும் என்று கூறியுள்ளார்.