கைதுக்கு அஞ்சமாட்டான் காங்கிரஸ்காரன்...! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..!
சிவகங்கை: காங்கிரஸ்காரன் கைது அஞ்சக்கூடியவன் இல்லை என்றும், கைது நடவடிக்கையால் அடக்கி ஒடுக்கிவிடலாம் என நினைத்தால் மோடிக்கு ஏமாற்றமே மிஞ்சும் எனவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இளங்கோவன் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார்.
இந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்
மோடி போஸ் கொடுப்பார்
பிரதமர் மோடிக்கு விதவிதமாக ஆடையணிந்து போஸ்கொடுக்க மட்டுமே தெரியும் என்றும், கீழ்நோக்கி செல்லும் பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை காப்பாற்ற தெரியாது என விமர்சித்தார். மேலும், சிறு,குறு தொழில்நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு முதலாளிகளை வீட்டுக்கு அனுப்பிய பெருமை மோடியையே சேரும் எனக் கூறினார். மக்களுக்கு மத்திய அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை திசை திருப்பவே சிதம்பரத்தை கைது செய்துள்ளதாகவும் பேசினார்.
வாய்ப்பூட்டு
நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை யாரும் எழுதவில்லை எனவும், அவர்கள் எழுதமுடியாத வகையில் தடுக்கப்படிருப்பதாகவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். நீதித்துறையிலும் மத்திய அரசின் அழுத்தம் இருப்பதாக புகார் கூறினார்.
தகுதி உள்ளதா?
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் எனக் கூறும் பாஜக நிர்வாகிகளை பார்த்து கேட்கிறேன் என்றும், காமராஜர் பெயரை உச்சரிக்க உங்களுக்கு தகுதியுள்ளதா எனவும் இளங்கோவன் வினவினார்.
ப.சி. பரம்பரை பணக்காரர்
ப.சிதம்பரத்துக்கு அங்கு சொத்து இருக்கிறது, இங்கு சொத்து இருக்கிறது எனக் கூறுபவர்களை பார்த்து கேட்கிறேன், ப.சிதம்பரம் ஒரு பரம்பரை பணக்காரர் என்பது உங்களுக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார். செட்டிநாட்டினரை பற்றி நமக்கெல்லாம் தெரியும், எப்படி வசதி வாய்ப்புள்ளவர்கள் என்று, அப்படியிருக்க அவரது தந்தை காலத்தில் வியாபராம் மூலம் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் முறைகேடாக வாங்கினார் எனக் கூறக்கூடாது எனப் பேசினார்.
மோடியின் சீடர் எடப்பாடி
தமிழகத்தை பொறுத்தவரை மோடியின் சீடர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கமிஷன் கேட்டு தொழில்தொடங்க வந்தவர்களை ஓட வைத்துவிட்டு இப்போது முதலீட்டை பெறுவதாக கூறி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்தார்.