கொரோனா எதிரொலி- ஷாஹின் பாக் பாணி போராட்டங்களை தவிர்க்க பேரா. காதர் மொகிதீன் வேண்டுகோள்
சிவகங்கை: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சி.ஏ.ஏ.வுக்கு எதிரான டெல்லி ஷாஹின் பாக் பாணியிலான போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிவகங்கை மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பல இல்லத் திருமண விழா திருப்பத்தூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:
மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிற இந்தத் தருணத்தில் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்போது கொரோனா வைரஸ் நோய் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது மேலும் பரவாமல் தவிர்ப்பதற்காக மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
நல்ல சேதி.. தமிழகத்தில் கொரோனா பாதித்த ஒரே நபரும் குணமடைந்தார்.. இன்று வீடு திரும்பும் இன்ஜினியர்
மக்கள் கூடுதல் தவிர்ப்பு
அந்த வரிசையில், அரபு நாடுகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகையைக் கூட மக்கள் கூடாத அளவில் தவிர்த்திரு க்கிறார்கள். இப்படியிருக்க, டில்லி ஷாஹின்பாக் போராட்ட முன்மாதிரியின்படி பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் கூட்டங்கூட்டமாக அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மட்டும் இப்போது நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
நம்மீது பழிச்சொல்
இதை நான் சொல்வதற்குக் காரணம், மக்கள் கூடினால்தான் இந்த கொரோனா வைரஸ் நோய் எளிதில் பரவும் என்ற அடிப்படையில் உலகம் முழுக்க பயத்துடன் கூடிய தவிர்ப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் நாம் கூட்டங் கூட்டமாக போராட்டம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டிருந்தால், "அதனால்தான் கொரோனா வைரஸ் பரவியது" என்ற பழிச்சொல் நமக்கு வந்துவிடும் சூழல் இருக்கிறது.
ஐநா சபையும் புரிந்துவிட்டது
இந்தக் கொடுஞ்சட்டத்தை எதிர்த்து அரசியல் ரீதியாக நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்திலும் நாம் வலியுறுத்தி, அதனடிப்படையிலான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம். இவற்றோடு, இன்று வரை நம் சமுதாயம் வெளிப்படுத்திய எதிர்ப்புணர்வை இந்தியா மட்டுமின்றி இன்று உலகமே நன்றாகப் புரிந்து கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையே புரிந்து கொண்டு விட்டது.
கூட்டமாக அமர்ந்து போராடுதலை தவிர்ப்போம்
உலகின் கவனத்தை ஈர்க்கவே நாம் கூடினோம். அது நடந்திருக்கிறது. இப்படியிருக்க, இனியும் கூட்டங்கூட்டமாக அமர்ந்து கொண்டிருந்து, அதன் காரணமாக "இவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியது" என்ற அவப்பெயர் நம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிடாதிருக்க - உலமாப் பெருமக்கள், ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் சகோதர - சகோதரியரும் சிந்தையில் ஏற்றி, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த மேடையைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் மெத்தப் பணிவோடு வேண்டுகிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் பேசினார்.