கொரோனா முகாமிலிருந்து தப்பி ஓடிய இளைஞர்.. காதலி வீட்டுக்குள் அடைக்கலம்.. புகுந்து தூக்கி வந்த போலீஸ்
கொரோனா முகாமில் இருந்து தப்பிய இளைஞர் பிடிபட்டார்
சிவகங்கை: கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி காதலி வீட்டிற்குள் புகுந்துவிட்டார்.. விடுமா நம்ம போலீஸ்.. துரத்தி கொண்டுபோய், காதலியின் வீட்டையே சுற்றி வளைத்து இளைஞரையும் கைது செய்துவிட்டது.. அதுமட்டுமல்ல.. இளைஞரை சந்தித்து பேசியதால், காதலியையும் தனிமைப்படுத்தி வைத்து விட்டனர்!
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.. ஒரு சின்ன அறிகுறி இருந்தால்கூட போதும் அவர்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டு விடுகின்றனர்.. தொடர்ந்து கண்காணிப்பிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறி உடையவர்.. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.. அதனால் தனிமைப்படுத்தப்பட்டு மதுரை சின்னஉடைப்பு பகுதியில் தங்க வைத்துள்ளனர்.. இவருக்கு வயது 22 ஆகிறது.
திடீரென இவர் இங்கிருந்து தப்பிவிட்டார்.. இதனால் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அவனியாபுரம் போலீசில் புகார் தரப்பட்டது... போலீசாரும் ஓடிப்போன இளைஞரை தேடி வந்தனர். இந்நிலையில், அந்த இளைஞர் சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடி வலையதாரனிப்பட்டி கிராமத்துக்கு வந்துள்ளார்.. இங்குதான் இவரது காதலி இருக்கிறார்.
முகாமில் இருந்து அவர் வீட்டுக்குகூட போகாமல் காதலியை சந்திக்க வந்திருக்கிறார்... இந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்ததையடுத்து, காதலியின் அந்த வீட்டையே சுற்றி வளைத்து விட்டனர். இளைஞரையும் அதிரடியாக கைது செய்தனர்.. இதை இளைஞர் எதிர்பார்க்கவே இல்லை.. இப்போதைக்கு அறிகுறி இருந்தாலும், காதலியை சந்தித்து பேசியதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
அதுமட்டுமல்ல, இளைஞரின் காதலி வீட்டையும் கண்காணிக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா இருக்குமோ என்ற பீதியும் கலக்கமும் இல்லாமல், முகாமில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற பயமும் இல்லாமல், நோயின் தீவிரத்தையும் உணராமல் இதுபோன்ற சில இளைஞர்கள் உள்ளது கவலையையே அளித்து வருகிறது.