காலையில் திமுகவுக்கு ஆதரவளித்த பெண் கவுன்சிலர்.. மதியம் திடீரென அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர் காலையில் திமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் மதியமே அமைச்சர் முன்னிலையில் அதிமுகவுக்கு தாவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவை காட்டிலும் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதிமுக
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்தில் என இருக்க கூட்டணி 9 இடங்களில் வென்றது. அதிமுகவோ 7 இடங்களில் வென்றிருந்தது.
சொர்ணம்
இந்த நிலையில் ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் பிரேமாவும் திமுக சார்பில் சொர்ணமும் போட்டியிட்டனர். இதில் 11-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சங்கீதா ஆதரவுடன் திமுகவின் சொர்ணம் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சங்கீதா
திமுக கவுன்சிலர் சொர்ணம் ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் சங்கீதா. இதையடுத்து ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சங்கீதா அமைச்சர் பாஸ்கரனை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
தேர்தல் ஒத்திவைப்பு
இதனால் அதிமுக, திமுகவுக்கு தலா 8 கவுன்சிலர்கள் என்ற பலமாக மாறியது. இதனால் ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.