காலரா நோய்: எதையெல்லாம் செய்யலாம்.. எதை செய்யக் கூடாது.. டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம்
சிவகங்கை: காலராவை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளார் அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.
Recommended Video
இதுகுறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலரா மற்றும் வயிற்றுப் போக்கு கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை காரைக்கால் மாவட்டத்தில் "பொது சுகாதார அவசர நிலையை" பிரகடனப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 700 பேர் மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தங்கி சத்திர சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் 17 பேருக்கு காலரா தொற்று இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
நேபாளம் டூ காரைக்கால்.. அச்சுறுத்தும் காலரா நோய்! இதுக்கும் அந்த “உணவு” தான் காரணமா?
மாவட்டத்தினர் என்ன செய்ய வேண்டும்?
புதுச்சேரியில் இருந்து சுகாதாரத் துறை அலுவலர்கள் காரைக்கால் விரைந்து வந்து பல்வேறு அரசு துறையினரின் ஒத்துழைப்புடன் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட மக்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு:
1. குடிக்கும் நீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்துப் பருக வேண்டும்
2. பொது இடங்களிலும் ஹோட்டல்களிலும் பாதுகாப்பான சுத்தமான தண்ணீரை பருகுவதை உறுதி செய்ய வேண்டும்
3. வீட்டிலோ அல்லது சுற்றத்திலோ யாருக்கேனும் வயிற்றுப்போக்கு ஏற்படின் தன் சுத்தம் பேணும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும்.
4. உண்ணும் உணவுகளை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவியும் முறையாக சமைத்தும் உண்ண வேண்டும்
கழிப்பறைகள்
5. பொதுவெளியில் மலம் கழிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் . எப்போதும் கழிப்பறைகளை உபயோகிக்க வேண்டும்.
6. வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் /மருத்துவமனைகளை உடனே அணுகிட வேண்டும்.
7. ஓ.ஆர். எஸ் திரவத்தின் ( ORAL REHYDRATION SALT SOLUTION) முக்கியத்துவத்தை உணர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்களுக்கு ஒரு லிட்டர் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரில் ஓ.ஆர்.எஸ் பொடியைக் கலந்து கொடுத்து வர வயிற்றுப்போக்கின் தீவிரம் வெகுவாகக் குறையும்.
மருத்துவ உதவி
8. தங்களது உறவினர்கள் மற்றும் சுற்றத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் குறிப்பாக முதியவர்களுக்கு தொற்று இருந்தால் அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க உடனே ஏற்பாடு செய்வது சிறந்தது.
9. வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் எங்கேனும் விரிசல் ஏற்பட்டு ஒழுகிக் கொண்டிருந்தால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திட வேண்டும்.
10. வயிற்றுப்போக்குக்கும் வாந்திக்கும் மருத்துவப் பரிந்துரையின்றி மருந்தகங்களில் சுயமருத்துவம் செய்து பொன்னான நேரத்தைக் கடத்துவது ஆபத்தான காரியமாகும்.
கடைபிடியுங்கள்
மேற்சொன்ன விஷயங்களை பொதுமக்கள் கடைபிடித்து இந்த கொள்ளை நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் இதில் இருந்து வெளியேற உதவிகரமாக இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகிடுவது பல உயிர்களைக் காக்கும் செயலாகும்.
காரைக்கால் மட்டும் அல்ல
காரைக்கால் மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் சுதாரிப்புடன் இருந்து இந்த கொள்ளை நோய் தொற்றுப் பரவலில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனைகள் மேற்சொன்ன விசயங்கள் காரைக்காலுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே தேவையான ஒன்றாகும். எனவே அனைவரும் கடைபிடித்து நமது ஊர்களில் தொற்றுப் பரவல் நிகழாமல் கவனித்துக் கொள்ளலாம் என மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.