மின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா? ஷாக்கில் கிராம மக்கள்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் மின் இணைப்பே வழங்காத வீட்டிற்கு ரூ.621 கரண்ட் பில் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பாகம் பிரியாள். இவர் அதேபகுதியில் புது வீடு கட்டி வருகிறார்.
வீட்டு வேலைமுடிந்துவிட்டதால் மின் இணைப்பிற்காகவும், மீட்டர் பொறுத்துவதற்காகவும் சாலைகிராமம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பத்திருக்கிறார் பாகம்பிரியாள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்தி உள்ளார். ஆனால் இதுவரை மீட்டர் பொறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகம்பிரியாளின் வீட்டிற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், புது வீட்டிற்கு உடனடியாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை கேட்ட பாகம்பிரியால், வீட்டில் மீட்டரே பொறுத்தவில்லை, மின் கட்டணம் எப்படி வந்தது என்று அதிர்ச்சி அடைந்தார். அவரது மாமா முத்துவயிரன் சாலைக்கிராமம் மின்நிலையத்திற்கு சென்று கேடடுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் சரியான பதிலை கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.
அத்துடன் மின்கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் வேறுவழியில்லாமல் அவர் ரூ.621 மின் கட்டணத்தை செலுத்தி உள்ளார். வீட்டில் கரண்ட் இல்லாமல், மீட்டரும் வைக்காத நிலையில் மின் கட்டணம் வசூலித்த சம்பவம் இளையான்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.