கீழடியில் ஏராளமான மண்டை ஓடுகள் கண்டெடுப்பு... 5-ம் கட்ட அகழாய்வுப் பணி மும்முரம்
சிவகங்கை: கீழடியில் நடைபெறும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியில் ஏராளமான மண்டை ஓடுகளும், பண்டைய காலத்து மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016ம் ஆண்டு 2வது கட்டமாகவும், 2017ம் ஆண்டு 3வது கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து 4வது முறையும் ஆய்வு நடந்தது.
முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 600 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
ஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த 13ஆம் தேதி தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அகழாய்வுப் பணியானது நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரமாக கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணியின் போது ஏராளமான மண்டை ஓடுகளும் பண்டைய காலத்து மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.