திமுகவில் மாஸ் காட்டும் ராஜகண்ணப்பன்... பரபரக்கும் சிவகங்கை மாவட்ட அரசியல்
சிவகங்கை: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் 2-வது முறையாக திமுகவில் இணைந்ததை அடுத்து சிவகங்கை மாவட்ட அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பனும், ப.சிதம்பரம் தரப்பும் ராஜகண்ணப்பன் வரவை ரசிக்கவில்லை.
அதிமுகவில் இருந்தபோதும் சரி, தனியாக இயக்கம் நடத்திய போதும் சரி எப்போதும் ஒரு பெருங்கூட்டத்தை தன்னுடன் வைத்திருந்தவர் ராஜகண்ணப்பன்.
மிரட்சி
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் கடந்த 23-ம் தேதி திமுகவில் இணைந்தார். இதற்காக அவர் ஏற்பாடு செய்த இணைப்பு விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது ஸ்டாலின் கூறிய வார்த்தைகளில் மிக முக்கியமான ஒன்று ''எந்நாளும் செயல்வீரர் ராஜகண்ணப்பன்'' என்பது தான். அப்போதே மேடையில் இருந்த தற்போதைய சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரியகருப்பனின் முகம் வெளிறியது. தனது பதவிக்கு ராஜகண்ணப்பன் வேட்டு வைத்துவிடுவாரோ என்ற மிரட்சியும் பெரியகருப்பன் முகத்தில் தெரிந்தது.
யாதவ சமுதாயம்
கடந்த 91-96 அதிமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். யாதவ சமுதாயசத்தை சேர்ந்த இவர் அந்த சமுதாய மக்களுக்காக ஏராளமான உதவிகளை செய்வதோடு பணத்தையும் வாரி வழங்கக்கூடியவர். தன் பெயர் போட்டு திருமண அழைப்பிதழ் கொடுத்தால், நிகழ்ச்சிக்கு செல்கிறாரோ இல்லையோ குறைந்தது ரூ.5,000 கொடுத்து அனுப்புவார். இதனால் இவருக்கு கட்சியை தாண்டியும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் தனிப்பெரும் செல்வாக்கு உள்ளது.
ப.சியுடன் மோதல்
தமிழ் மக்கள் தேசம் என்ற கட்சியை கலைத்துவிட்டு 2001-ல் திமுகவில் இணைந்த அவர் 2006-ல் இளையான்குடி எம்.எல்.ஏவாக திமுக சார்பில் வெற்றிபெற்றார். பின்னர் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு கடைசி நொடி வரை ப.சி.தரப்பை கதறவிட்டார். இவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே, ப.சிதம்பரத்தை ''ரீ கவுண்டிங் மினிஸ்டர்'' என பாஜகவினர் இன்றும் கேலி செய்து வருகின்றனர். ப.சிதம்பரத்துக்கும் ராஜகண்ணப்பனுக்கு தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தம். இருவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ. சீட்
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற இணைப்பு விழாவில், மு.க.ஸ்டாலினே எதிர்பார்க்காத வகையில் திருவாரூர் மாவட்டம் கட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைப்பதற்காக ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கி அசத்தினார் ராஜகண்ணப்பன். திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட யாரும் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை தந்ததில்லை. ராஜகண்ணப்பன் ஒரே செக்கில் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து திமுகவினரை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
புதிய பதவி
இதனிடையே திமுகவில் பெரியகருப்பனிடம் இருந்து விரைவில் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அது ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. பெரியகருப்பன் மீது ஏற்கனவே ஸ்டாலின் கடுமையான அதிருப்தியில் தான் இருந்து வருகிறார். இருப்பினும் வேறு வழியின்றி இத்தனை நாட்களாக அவர் அமைதி காத்தார். ஆனால், ராஜகண்ணப்பன் போன்ற தனிப்பெரும் செல்வாக்கு பெற்ற நபர் தற்போது திமுகவில் இணைந்துவிட்டதால் விரைவில் அவரை கவுரவிக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் பதவி தரப்படலாம் எனக் கூறப்படுகிறது.