ஊராட்சி தலைவர்... மாமாவுக்கு ஓட்டு போடுங்க... பிரான்ஸ் பெண் பிரச்சாரம்
சிவகங்கை: திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மேலராங்கியம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டி என்பவருக்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வோட் ஃபார் மாமா என்ற முழக்கத்துடன் அவர் பிரச்சாரம் செய்வது மேலராங்கியம் கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் கலாச்சாரமும், வீடு தேடிச் சென்று வாக்குக் கேட்கும் முறையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், தேர்தல் முடியும் வரை சிவகங்கை மாவட்டத்தில் தங்கி அதை பார்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார் பிரான்ஸ் பெண் ஜோ.
வாக்கு சேகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உள்ளட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மருதுபாண்டி என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குக் கேட்டு ஜோ என்ற பிரான்ஸ் பெண் பரப்புரை செய்கிறார்.
ஊரக உள்ளாட்சி
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் களைகட்டியுள்ளது. கிராமங்கள் தோறும் தீவிர வாக்குசேகரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. பல கிராமங்களில் போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
மாமாவுக்கு ஓட்டு
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மேலராங்கியம் கிராமத்தில் வாக்குசேகரிக்கும் பிரான்ஸ் பெண் ஜோ, மருதுபாண்டி மாமாவுக்கு ஓட்டு போடுங்க (vote for maruthupandi mama) என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளார். அவரது பிரச்சாரத்தை காண்பதற்காக திருப்புவனம் சுற்றுவட்டார கிராமமக்கள் மேலராங்கியம் கிராமத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்த மருதுபாண்டி, தனது அக்காள் மகன் முனீஸின் தோழி தான் இந்த ஜோ என்றும், அவர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் விளக்கம் அளித்தார்.