சட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி
சிவகங்கை: சட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு திருஉருவப்படம் வைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அத்துடன் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முழு உருவப்படமும் சட்டசபையில் வைக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று கொரோனா ஆய்வுப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். சிவகங்கையில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.27.46 கோடியில் 30 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.36.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறை சார்பில் 27 முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைத்தார். அத்துடன் சிவகங்கை மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் 100 இடங்களை உயர்த்தி 150 இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
சிவகங்கையில் அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறைதீர் முகாம்கள் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் 76 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு திருஉருவப்படம் வைக்கப்படும். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முழு உருவப்படமும் சட்டசபையில் வைக்கப்படும் என்றார்.