கஜா நிவாரணம்.. அரிசி அனுப்பி வைத்த இளம் மாணவர்கள்.. சபாஷ் போடுங்கள் இந்த பிஞ்சுகளுக்கு.. !
தேவக்கோட்டை: பிஞ்சுகள் எல்லாம் சேர்ந்து கஜா புயல் நிவாரணமாக அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்துள்ளார்கள்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் எப்பவுமே வித்தியாசமானவர்கள்.. சமூக அக்கறை நிறைந்தவர்கள்... உதவும் எண்ணங்களை இப்போதே மனதில் விதைத்து கொண்டவர்கள். அதனால்தான் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதில் தங்கள் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும் என்று களத்தில் குதித்து விடுவார்கள்.
தலைமை ஆசிரியர்
அப்படித்தான் இப்போதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக அரசி மூட்டைகளை அனுப்பினார்கள். இதற்கெல்லாம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்தான். கஜாவின் தாக்கத்தை பற்றி தலைமை ஆசிரியர் காலையில் ப்ரேயர் நேரத்தில் விலாவரியாக சொல்லி இருக்கிறார்.
[கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியிலிருந்து குமுறல்! ]
சேமிப்பு பணம்
இதனை கேட்டு மனம் வருத்தப்பட்ட 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி உண்டியலில் காசை போட்டு, அதை மொத்தமாக கொண்டு வந்து கஜா புயல் பாதிப்புக்கு என்று பள்ளி முதல்வரிடம் கொண்டு போய் தந்தார்கள். அந்த பணம் மொத்தம் ரூ.850 இருந்தது.
11 அரிசி மூட்டைகள்
இதைதவிர தலைமை ஆசிரியர், பள்ளி செயலர் சோமசுந்தரம், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து 11 அரிசி மூட்டைகளை வாங்கினார்கள். அதனை கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளான கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி, கோமாபுரம், வடுகபட்டி பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள்.
கருணை உள்ளம்
அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் நேரிலேயே சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் சென்று இந்த அரிசி மூட்டைகளை வழங்கினார். கேரள வெள்ளத்தின்போது, 8000 ரூபாயை சேமித்து கொடுத்த இதே பள்ளி மாணவர்கள்தான் இப்போதும் தங்களது கருணையை பெருக்கி ஈகையை விரிவுபடுத்தி கொண்டே செல்கின்றனர்.